Tuesday, November 1, 2011

கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணம்!

எஸ்.அர்ஷியா


தேய்பிறை இரவுகளின் கதைகள் கீரனூர் ஜாகிர் ராஜாவின் பதினேழு ஆண்டுகாலத் தனிமையை நம்மிடம் பகிர்வதாக இருக்கின்றன. தன்னை தனது சுற்றுச் சூழலை நேர்மையானப் படைப்பாளியாகக் கேள்விகளுக்கு உட்படுத்துவதுடன் தன் படைப்புகள் மூலம் ஆத்மசோதனையும் சுய உணர்தலும் கொள்கிறார். வாழ்வின் மீது தீராத பற்றும் சக மனிதர்கள் மீது இனிய தோழமை அன்பும் கொண்டிருக்கும் இந்தப் படைப்பாளி அதன்மூலம் தான் அறிந்த மிகவும் எளிய மனிதர்களைப் பற்றி மிகச் சரளமான மொழியில் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போகிறார்.

வழக்கமாக இஸ்லாமியச் சிறுகதைகள் ஏகன் இறைவனின் கருணையையும் நபி பெருமான் அவர்களின் பராக்கிரமங்களையும் ஊரில் பெரிய மனிதராகக் கணிக்கப்பட்டவர் ஹஜ் பயணம் புறப்படும் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது அவர் ஊர் திரும்பும் கொண்டாட்டம் பற்றியதாகவோ இருக்கும். தொழச் சொல்லியும் ஜக்காத் கொடுக்கச் சொல்லியும் வலியுறுத்தும் கதைகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. அப்படிச் செய்தால் வாழ்க்கை வளம்பெறும் என்று பயான்கள் செய்யப்படுவதுண்டு. தொழப்போகாமல் தூங்கிக்கொண்டிருப்பவன் வாய்க்குள் இப்லிஷ் மூத்திரம் மோண்டுவிடும் பயமூட்டல் கதைகள் மட்டுமே இஸ்லாமியக் கதைகள் என்று அடையாளம் காட்டப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கின்றன.

அப்படித் தொழப்போயும் ஏழை எளியவர்கள் ரம்ஜான் குத்பாவுக்கு புதுத்துணி வாங்க முடியாமல் கஷ்டப்படுவதையும் பிறை பார்த்து ஊரெல்லாம் கொண்டாட்டத்தில் இருக்கும்போது சோர்ந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவர்களுக்கு யாரோ வழிப்போக்கர் புத்தாடைகளைக் கொடுத்துவிட்டு மறைந்துபோகும் அற்புதங்கள் நிறைந்தக் கதைகள் ரம்ஜான் மாதத்தில் வணிகப் பத்திரிகைகளிலும் இஸ்லாமியப் பிரச்சாரப் பத்திரிகைகளிலும் பிரசுரமாவதுண்டு. தொழுதலுக்கானப் பரிசு என்று அதை வியந்தோதியும் வந்தார்கள். அந்தக்கதைகளும்கூட முந்திய ஆண்டு எழுதிய அதே எழுத்தாளர் பாத் திரங்களின் பெயர் ஊர் மாற்றி எழுதியதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. சிலவேளைகளில் பிறை தெரியாத அவஸ்தைக் கதைகளும் வந்ததுண்டு. பக்ரீதுக்கு இருக்கவே இருக்கிறது ஆடுகளும் அதுகுறித்த வதைகளும்.

இவையெல்லாம் இல்லாமல் எளிய மக்களின் பாடுகளையும் வாழ்க்கையின் முரண்களையும் பொருளாகக் கொண்டு ஒன்றிரண்டு கதைகள் எப்போதாவது வந்ததுண்டு. நிச்சயமாக இஸ்லாமியப் பத்திரிகைகளில் அவை அச்சானதில்லை. அதை எழுதியவர்கள் அவற்றை ஏன் தொடரவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. கேள்விக்கு பதிலாக ஒருசிலர் நட்சத்திரங்களாகத் தோன்றியதுமுண்டு. அப்படித் தோன்றியவர்களில் கீரனூர் ஜாகிர்ராஜாவிடம் கூடுதல் ஒளி தென்படுகிறது.

முப்பால்போல தேய்பிறை இரவுகளின் இந்தக்கதைகள் மூன்று வகைமைகளைக் கொண்டதாக இருக்கின்றன. அதை அவர் எழுதிய காலத்தின் அடிப்படையிலும் இடங்களின் சூழலிலும் கதைகளின் தன்மையிலும் பகுக்கலாம். எப்படிப் பகுத்துக் கொண்டாலும் அதை வாசிக்கும்போது அதற்குள் உறைந்து கிடக்கும் வீரியம் இதற்கு முன் வெளிப்படாததாக இருக்கிறது. ஏற்கனவே இஸ்லாமிய எழுத்தாளர்களால் இட்டுக்கட்டப்பட்டதை அல்லது மறைக்கப்பட்டதை உடைத்து வீசுவதாகவும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் உடைய உடைய இதற்கு முன் உண்மை என்று நம்பப்பட்டு வந்த 'மூடாக்குகள்' சிதறி முகத்தில் அறைகின்றன.

முதல் சிறுகதையான வெம்மை லெளகீகத்தின் திசைகள் தோறும் விரிந்திருக்கும் பிடிக்குள் அடங்காமல் மனச் சுதந்திரத்துடன் அலைய விரும்பும் ஒருவன் சமூகத்தின் மறைமுக வாழ்வியல் மிரட்டல்களுக்கும் ஏளனப் பார்வைகளுக்கும் ஆட்பட்டு உள்ளுக்குள் குமுறும் வாழ்வற்ற அவஸ்தையை அப்பட்டமாக்குகிறது. பிறந்த கணத்திலிருந்து இல்லாத அதீதமான ஒரு வெம்மை கல்யாணமான நாள் முதல் உடலைக் கவ்விக் கொண்டு விடமாட் டேனென்கிறது என்று சொல்லும் துயர் அரசு பதவியோ முறையான வருமானமோ அல்லது அரசியல் சம்பாத்தியமோ இல்லாத எல்லா இளைஞர்களுக் கும் பொருந்திப் போகும் ஒன்று. ஒட்டுமொத்த உலக இளைஞர்களின் துயரம். மனைவியின் கிழிந்த துப்பட்டிக்குப் பதிலாக கறுப்பு வண்ண பர்தாவை வாங்கித்தர முடியாமல் வீட்டுக்குள் உருவாகும் அவலம் நிறைந்த சச்சரவு அவனை வெளிநாட்டுக்குத் தள்ளிக் கொண்டு போகிறது. துப்பட்டிக்கு மாற்றாக இங்கு கண்டறியப்படும் கறுப்பு வண்ண பர்தா தாய்மண்ணைப் பிரிந்துபோகின்ற மனத்தின் அடிவேரைக் கொத்தாகப் பிடுங்கிய இஸ்லாமிய இளைஞர்களின் ஜீவ உடல் உழைப்பு ரத்தமும் வியர்வையுமாக மணல் காட்டிலும் பொரிக்கும் வெயிலிலும் உறிஞ்சப்பட்டு அதற்கு மாற்றாக சாதாரணப் பண்டமாக இறக்குமதி செய்யப்படும் குறியீடு. கூடவே அதைக்கொண்டு பெண்ணைப் போர்த்தும் அடிமைத்தனத்தையும் இறக்குமதி செய்கிறது. இப்போது வெளியாகும் எந்த இஸ்லாமியப் பத்திரிகையை கையில் எடுத்தாலும் அதன் வண்ண மயமான அட்டையில் பர்தாக்களின் விளம் பரங்களைக் கண்ணாறக் காணலாம். அதனடியில் அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று அடிக்கோடு குறிப்பு இடப்பட்டிருக்கும். மனைவி மக்களைப் பிரிந்து பணத்தின் மீதான வேட்கையுடன் புது நட்பு களுடன் ஒண்ட முடியாமல் முற்றிலும் மாறான இயற்கை அமைப்பில் உடல் உபாதைகளுக்கு ஆளாகி பொலிவிழந்து மன உலைச்சலுக்கு உள்ளாகி அவன் ஈட்டிக்கொண்டு வருவதை பெருஞ்செல்வமாகப் பார்க்கும் சமூகம் அதற்குள் பொதிந்து கிடக்கும் அவனது பேசா மொழியையும் மெளனமுமான உணர்வுகளையும் கண்டு கொள்வதில்லை. அதை அந்தஸ்து என்கிறது. அதில் அவன் தோல்வியடையும்போது அது வன்மமாக உருவெடுக்கவும் செய்யலாம். மனப்பிறழ்வுக்கும் வகை செய்யலாம். இஸ்லாமிய இளைஞர் களுக்கு துபாய் என்றால் மற்றவர்களுக்கு அமெரிக்கா. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் 'இன்னுமா பயணம் புறப்படவில்லை?' எனும் குரல் இஸ்லாமியர்கள் வாழும் தெருக்களில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றது.

அப்படி ஈட்டிக்கொண்டு வரும் பொருட்கள் வாழ்க்கையை மட்டுமல்ல நகர்களின் புராதனங்களையும் மாற்றியமைத்து உயர்கோபுரக் கடைகளாகி மாட மாளிகைகளாகி தொன்மங்களை காவு வாங்கி விடுகின்றன. அப்படிக் காவுக்கு உள்ளான தஞ்சாவூரில் உறவுக்கார ஹனிபா மாமுவைத் தேடிக்கொண்டு போகும் 'ரெட்டை மஸ்தானருகில்' சிறுகதை புதிய வேதனையைத் திறந்துகாட்டுவதாக இருக்கிறது. ரெட்டை மஸ்தான் என்பது அந்த ஊரிலிருக்கும் ஒரு தர்ஹா. இஸ்லாமிய மக்களுடன் பிற சமூகத்தினரும் ஆறுதலும் தேறுதலும் கொள்ளும் இடமாகும். அதனருகில் ஏதோ ஒரு அற்புதம் நடக்கப்போகிறது என்பதானத் தூண்டுதலை தலைப்பு கொண்டிருந்தாலும் அதுபேசும்பொருள் முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. புதிதாக அறிமுகமான ஒரு கால்குலேட்டர் எப்படி ஒரு கணக்குப் பிள்ளையின் வாழ்க்கையை முடக்கிவிட்டதோ அதே வேலையை கூடுதலாகக் கம்ப்யூட்டரும் செய்து ஹனிபா மாமுவின் தங்க நிற மூடியைக் கொண்ட பேனாவை மங்கலாக்கியதுடன் வாழ்தலுக்கான புதிய ஒப்பனையை - பெண்களின் பிரத்யேக ஒப்பனையை - அவரை ஏற்றுக் கொள்ளச் செய்திருப்பதை மனஅவசத்தோடு காணச் செய்கிறது. வாழ்தலுக்காக எதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நோக்கும்போது அதிர்ச்சியைத் தாண்டிய நடுக்கம் தோன்றுகிறது.

பிறரைக் காவுகொண்டு களிநடனம் ஆடுகின்றப் 'பெருநகரக் குறிப்புகள்' கலையின் எவ்வகையைச் சார்ந்தவருக்கும் கட்டாயம் கிடைக்கின்ற அனுபவப் பேழை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவம் அதனுள்ளிருந்து எழுந்துவந்து பொருந்திப் போகும். மனக்கிளர்ச்சியைத் தரும். முன்புபட்ட அவஸ்தைகளை மீள் உருவாக்கம் செய்து பார்க்கும்போது கடந்துவந்த திசைகள் மனசில் தவிப்பையும் முகத்தில் புன்சிரிப்பையும் அரும்பச் செய்யும். ஒருவேளைத் தேநீருக்காக... ஒருவேளை உணவுக்காக... தூங்கும் இடத்துக்காக... அவசரத்துக்குக் கைமாத்து கேட்பதற்காக... அலைந்து திரிந்ததை இப்போது பெருமுயற்சிகள்போல பேசச் சொல்லும். அதனூடே தொடர்ந்த பயணம் வெற்றி பெற்றிருந்தால் அவற்றுக்குப் பெயர் நான் நடந்து வந்த பாதை என்று மாறிப்போய்விடுகிறது. அதேவேளையில் தோல்விகள் அதனை காலந்தோறும் குறிப்புகளாக வைத்து பொக்கிஷமாகப் பார்க்கச் செய்கிறது. விஜயராஜின் டிரங்க் பெட்டி நிரம்பி வழிந்ததாகச் சொல்லப்படும் இடம் எப்படியும் வென்றுவிடுவோம் எனும் நம்பிக்கையின் ஆணிவேர். அதுதான் இன்னும் இன்னும் இளைஞர்களை பெருநகரம் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. பெருநகர வீதிகளில் நடந்துபோகும் அத்தனைபேரிடமும் ஏதோ ஒரு கதை இருக்கிறது. நாளைய பெருநகரக் குறிப்புகள் அவர்களாலும் எழுதப்படும்.

தொகுப்பின் மிக முக்கியமானக் கதையாக 'குடமுருட்டி ஆற்றின் கரையில்' அமைந்து போயிருப்பது தற்செயலானது அல்ல. இஸ்லாமியக் குடும்பங் களில் வரன் தேடும் வைபவம் என்பது புவ்வா போன்றவர்களாலும் வீட்டுக்கு 'சபக்' சொல்லிக் கொடுக்க வரும் உஸ்தாத்பீக்களாலும் நடத்தப்படுகிறது. இவர்கள்தான் நடமாடும் மேட்ரிமோனியல்கள். உள்நுணுக்கங்கள் தெரிந்தவர்கள். எல்லைகளைத் தொடுபவர்கள். உள் விளிம்புகளை வளைத்து எதை யும் சாதித்துக் காரியம் கைகூடிவரச் செய்யும் திறமை அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருப்பது வியப்பு தருவதாக இருக்கிறது. இந்தக்கதையில் வரும் புவ்வா அதையும் தாண்டிய மனுஷியாக இருப்பது அவள் மீது பிரேமையை உருவாக்குகிறது. வாழ்க்கை இழந்து இரண்டு குழந்தைகளுடன் உழன்ற உம்மசல்மாவுக்கு இரண்டாவது நிக்காஹ் நடத்தி வைக்கவும் தெம்பிருந்தது புவ்வாவுக்கு என்ற வரிகள் அந்த பிரேமைக்கு வலுசேர்ப்பதாக இருக்கின்றது. அதே புவ்வாவுக்கு தனது காரியதரிசியான ஹைரூன்னிஸாவுக்கு ஓரிடத்தைக் கோர்த்து விடுவதில் மனமுரணும் இருக்கிறது. அவளிடமுள்ள மெல்லியதான இந்த மனவிலகல்... இந்த முரண்... யதார்த்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறது. அவளுக்குள் ஓடும் வாழ்வியல் அரசியல் கதைக்கு ஓர் அம்சத்தைத் தருகிறது. யதார்த்தத்துக்கும் மாயவாதத்துக்கும் இணைப்பாக சாயாக்கடை ஜக்கரியா இருக்கிறார். அப்துல் காதர் ஜீலானி ஆண்டகை மீரான் மைதீன் கதைகளிலும் எஸ். அர்ஷியாவின் கதைகளிலும் ஜாகிர்ராஜாவின் கதைகளிலும் இடம் பெறுவதில் ஒரு ஓர்மை இருப்பதாகவே படுகிறது. அவர் அற்புதங்களை நிகழ்த்தும் சாதாரண மனிதராகவே காட்சிக்கு வருவதும் அப்படித்தான். அதனாலேயே இந்தக்கதை மற்ற இஸ்லாமிய எழுத்தாளர்களின் கதைகளிலிருந்து ஓர் அங்குலம் முன்னுக்கு இருக்கிறது. யாருமறியாத ரகசியக் கொலுசொலிக்க ஹைரூன் குடத்தை எடுத்துக்கொண்டு அந்த இருளில் ஆற்றை நோக்கி நடந்தாள். நல்ல வியாபாரம் கொழிக்கிற நேரத்தில் சாயாக்கடையில் ஜக்கரியா இல்லாதது புவ்வாவுக்கு ஏமாற்ற மளித்தது என்பதுடன் கதை முடிந்து போகிறது. ஆனால் ஹைரூன்னிஸா வெறுமனே பருத்துப் பிதுங்கும் மார்புகளைக் கொண்ட சதைக்கோளம் அல்ல. உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் ஆன பெண் என்பதை உணர்த்தும் கதை அந்த இடத்திலிருந்துதான் கிளைக்கிறது. அதுவே தொகுப்பில் இந்தக்கதையை முக்கியமான இடத்துக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

உருவம் கதையில் வரும் மனைவியை இழந்த மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது அடையாளங்களுக்குள் உலவும் ஓர் மனிதராகத்தான் தெரிகிறார். பயான் செய்யும் மெளலவிகளும் மிகச்சாதாரண மனிதர்கள்தாம். அவர்கள் மூக்கால் சுவாசிப்பவர்களாகவும் வாயால் உண்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனனம் செய்து துப்பும் வாசகங்கள் நம்மிலிருந்து அவர்களை தூரத்தில் நிறுத்தி அவர்களுக்கு அந்தஸ்தைக் கொடுத்து விடுகிறது. அவர் செய்யும் தொழில் உன்னதமாக்கப்பட்டதால் அவருக்கு அந்த அந்தஸ்து. அவ்வளவுதான். தாடி வளர்த்து குல்லா அணிந்து அத்தர் மணம் கமழ பயான் செய்பவர்களில் பலர் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது சாதாரணமாகவே பார்க்கக் கிடைக்கும். மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது கூட தன்னிலையை ஒப்புக் கொள்வதாக "வாஸ்தவத்தில் நான் இப்படிப்பட்ட ஆளல்ல. கொஞ்சம் நாளா மனசில கொழப்பம். இன்ஷா அல்லாஹ் அப்படி ஒரு படம் கெடச்சுட்டாப் போதும்னு இப்பத் தோணுது. ஏன்னு தெரியல... எல்லாம் அல்லாஹ் அறிவான்..." என்று சொல்கிறார். இந்த இடம் மிக முக்கியமானது. எந்த மனிதனாலும் நினைவுகளைத் தாண்டிவிட்டுப் போகமுடியாது. அதுபோல இழப்புகளையும். மதம் செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகள் எல்லா இடத்திலும் ஒன்றாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் செல்வாக்குடன் திகழும் இஸ்லாமியக் குடும்பங்கள் எத்தனையிருக்கும் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவைகளும்கூட சிதைந்துகொண்டு வருகின்றன என்பது கண்கூடு. அனிபா ராவுத்தரின் ஆயிஷா மன்சில் அப்படிச் சிதைந்து போனவைகளில் ஒன்று. கடன்கூட பெற முடியாத நிலைக்கு உள்ளாகும் அனிபா ராவுத்தரின் கடந்த காலம் படாடோபமாகத்தான் இருந்திருக்கும். இன்று பள்ளிவாசல் ஹவுஜில் ராஜமீனைக் களவாடிய குற்றத்துக்கு உள்ளாகி நிற்கிறார். களவாடிய மீன் மருமகனுக்கு குழம்பாகியோ... பொறிக்கப்பட்டோ போயிருக்கும். ஆனால் அவமானம்? ஹவுஜில் மீன்கள் வளர்க்கப்படுவது தொன்மம். அவற்றை பிடிக்கக்கூடாது என்று சொல்வதுண்டு. வளர்ந்து முதிர்ந்த மீன் என்னாகும் என்ற கேள்வி வேடிக்கைப் பார்க்க... பொறிபோட வரும் சிறுவர்களிடம் இருக்கவே செய்கிறது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா டாக்கிகளில் (நீர்க்குளங்கள்) மீ ன் பிடிக்கக்கூடாது என்று தகவல் பலகையே இருக்கிறது. ஆனால் அக்குளத்து மீன்கள் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டேதான் இருக்கின்றன. வந்துபோகும் யாத்திரிகர்கள் யாரும் அதைத் திருடும் வாய்ப்பே இல்லை. ஆனால் இப்போது நகரின் முக்கியமான தொழுகைப் பள்ளிவாசல்களில் ஒலு செய்வதற்காகக் கட்டப்பட்ட ஹவுஜ்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்றாக குழாய்கள் நிறுவப்படுகின்றன. ஹவுஜ் இருந்த இடங்கள் பத்துக்குப் பத்து கடைகளாகி நிர்வாகத்தின் வருமானத்துக்கும் ஊழலுக்கும் அடிகோலுகின்றன.

அதுபோல செம்பருத்தி பூத்த வீடு யாரையும் வசீகரித்துவிடும் வல்லமை கொண்ட கதை. இளமையைத் தொடும் ஆண்பெண் இருபாலர் யாருக்குமே காதல் இல்லாமல் போகாது. குறைந்த பட்சம் மனசுக்குள்ளாவது இருந்திருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பின் ஊர் திரும்பும் நாயகன் தன் இளமைக் கால நாயகி எஸ். மயிலாத்தாவின் செம்பருத்தி பூத்த வீட்டைப் பார்க்கக் கிளம்புகிறான். அதில்தான் எத்தனை சுகம்? எதிர்பார்ப்பு? வீடு மாறாமல் அப்படியே இருப்பதில்தான் எத்தனையெத்தனை ஆனந்தம்! விட்டுப்போன இடைக்காலத்தை மீட்டெடுக்கும் நினைவுகளின் வழியே ஊடுருவும் மனசு. 'ஆத்தா' - 'ஆத்தா' - 'ஆத்தாவ்' - ரொம்ப நாளாயிப் போச்சு இப்டியெல்லாங் கூப்புட்டு கொஞ்சம் வெட்கமாக்கூட இருந்துச்சு. திரும்பத் திரும்பக் கூப்புட்டுப் பாத்துக்கிட்டேன் எனும் வாசகங்களில் அந்த இளம்வயதுக்கே திரும்பிப்போய்விடும் சூத்திரம் ஒளிந்து கிடக்கிறது. வீட்டைப் பார்த்துவிட்ட வனுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கும் ஆவலை மனம் கிளறுகிறது. "மாப்ள அந்தப் புள்ள செத்துப் போயி ஏழெட்டு வருஷமாசேடா" என்கிறான் நண்பன். அவன் மனசுக்குள் பாலாய்ப் பொங்கிக் கொண்டிருந்த அத்தனையும் அடங்கிப்போய்விடுகிறது. போதும் இங்கேயே கதையும் முடிந்துவிட்டதாக உணர முடிகிறது. அதன் பின்பு எதுவாக இருந்தாலும் அது கூடுதல்தான். மாயந்தான் என்றறிந்தாலும் இப்படியான விடலை நினைவுகள் இல்லாத யுவனும்யுவதியும் இந்த லோகத்தில் இல்லவே இல்லை. அந்த சுகமான வலிகள்தான் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போகின்றன. காதலும் அதை யொற்றி எழக்கூடிய நினைவுகளும் பசுமையானவை. அதற்குள் பயணம்செய்து எழுத்தாக மீட்டெடுக்கும் லாவகம் படைப்பாளியிடம் தெளிந்து கிடக்கிறது.

ஊர்ஊராய்ச் சுற்றி யாசகம் வாங்கிப் பிழைக்கும் சலீமின் பார்வையிலிருந்து விரியும் சுவடுகள் கதை தருமம் என்ற சொல்லிலிருந்து கிளைந்து அதைப் பெற முயற்சிப்பவர்கள் படும் அவலத்தையும் அவசத்தையும் வெளிப்படுத்துவது. யாசகத்துக்கு பெண்களும் குழந்தைகளுமே முன்னிருத்தப்படுகின்ற னர். அதுதான் தொழிலில் கூடுதல் பொருளீட்டலைப் பெற்றுத் தருகிறது. அந்த முன்னிலைப்படுத்தல்தான் மகளின் அலறலை "உனக்கு பிரம்மையாக இருக்கலாம்" என்று அத்தாவை சொல்ல வைக்கிறது. யாசகம் கேட்டுப்பெறுதல் எனும் எளிய பார்வையைத் தாண்டி அதற்குள் உறைந்து கிடக்கும் மற்றவையான அவமானம் புறந்தள்ளல் கண்டுகொள்ளாமை யார் கண்ணிலும் படாமல் போய்விடுகிறது. கதையில் வரும் அக்காவின் அலறலை சமூகத்தின் அலறலாகக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

வேற்றுக் கிரக அவாந்திரப் பெருவெளியில் பொம்மையுடன் கைகோர்த்தவாறு திரியும் குழந்தை தெளபிக் இடம்பெறும் ஆண்பொம்மை ராட்சஸப் பறவையின் சிறகுகள் கதையில் வரும் சக்கரை முகமதுவின் மன உலைச்சல் ஆதிமை நீஸா என்றொரு சிநேகிதி போன்ற சிறுகதைகள் நிஜங்களுக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. சடங்குக்காக செய்யப்பட்ட சைத்தானை அடிப்பதில் மக்கள் கொள்ளும் ஆர்வம் கடமையாக்கப்படுகிறது.

அதேவேளையில் ஆடான நீஸாவின் சிநேகிதி ஆயிஷா 'சைத்தாம் புடிச்சவளாக' ஆக்கப்படுவது ஆட்டை அறுப்பதுபோல நெஞ்சை அறுக்கிறது. கறுப்புக்கோட்டு பக்ரீத் ஆடுகள் எளிய விளிம்புநிலை மக்களின் பாடுகளை உரித்துக் காட்டுவனவாக இருக்கின்றன. சுவர்கள் சிரிக்கின்றன உள்வெளி போன்ற கதைகள் நிகழ்த்துதலைத் தாண்டிய பதிவுகளாக மட்டுமே இருக்கின்றன. நிழலின் சாயலும் சாயலின் நிழலும் 'சென்னை வாழ்க்கையைப் படம் பிடிக்கிறதா?' என்றாலும் புல் ஓபன் நைட்டின் ஜிப் திடீரென கீழிறங்கி இருந்ததைக் கவனித்தான்."இதுதான் சர்ர்ர்ரியலிசம்..." என்றபடி சுதந்திரமானான் எனும் பகடி ரசிப்பதாக இருந்தது. வேறுகதைகளில் இல்லாதது.

சிறந்த எழுத்து என்று வரையறுக்கப்படும் சமூகப் பொறுப்புணர்வு தார்மீக எழுச்சி சுதந்திரம் ஆழம்என சகல மேன்மைகளும் நிரம்பிய அந்தரங்க நிலை படைப்பாளியிடம் கொட்டிக்கிடக்கிறது. அதனாலேயே கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணத்தைக் கொண்டவையாக அவரது கதைகள் இருக்கின்றன.

இந்தப்பின்னணியில் உருவாகியிருக்கும் கதைகளை முன்னரே சொன்னதுபோல மூன்று வகைமைகளாகப் பகுத்தாலும் அதனுள் சூழல் ஜாகிர்ராஜாவை கீர னூர் தஞ்சாவூர் சென்னை என்று மூன்று இருப்பிடங்களில் இருத்தி உருவாக்கிப் பயணிக்கச் செய்திருக்கின்றது. அவற்றுள் சென்னையைக் காட்டிலும் முதலிரண்டு தளங்களில் பின்னப்பட்டக் கதைகள் நெஞ்சை நிறைக்கின்றன. ஆனாலும் கூட ஜாகிர்ராஜாவின் முன்னே இன்னும் இன்னும் விரிந்து பரந்த களம் ஆடப்படாமல் இருக்கவே செய்கிறது. அதில் நிகழ்த்துவதற்கான மூலங்களும் திறமும் அவரிடம் நிறையவே இருக்கின்றது.

நன்றி : உயிர் எழுத்து. நவம்பர் 2011.

Sunday, October 30, 2011

திருப்பரங்குன்றம் சமணர் படுகை


எஸ். அர்ஷியா

GREEN WALK -7 பசுமை நடை 7க்கான களமாக திருப்பரங்குன்றம் மலையின் வடமேற்கிலிருக்கும் சமணர் படுகையையும் மலையின் தென்புறத்தே இருக்கும் குகைக்கோவிலையும் நண்பர் அ.முத்துக்கிருஷ்ணன் அறிவித்திருந்தார்.
அக்டோபர் 30 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மதுரை வசந்த நகர், ஆண்டாள் புரம், பைபாஸ் ரோடு, சுப்பிரமணிய புரம் போலிஸ் ஸ்டேஷன், ஜெயம் தியேட்டர் வாசல் ஆகிய இடங்கள் ஒன்றிணையும் ரவுண்டாணா அருகில் கூடுவதாகச் சொல்லப் பட்டிருந்தது.
பின்னிரவில் தொடங்கிய மழை சற்றே குறைந்து தூறலாக விழுந்துகொண்டே இருந்தது. எப்போதுமே கசகசப்பாக இருக்கும் மதுரை, அன்றைய தினம் தேவர் ஜெயந்தி என்பதால் வழக்கமான கசகசப்பு குறைந்து, விழாவுக்கான பரபரப்பு காலையிலேயே தெரிந்தது. வீட்டிலிருந்து கோரிப்பாளையம் தாண்டும் போது, காக்கிச்சட்டைகளாகத்தான் தெரிந்தார்கள். தூறல் மட்டுப்பட்டு சூரியன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். சாலைகளில் பலத்த அமைதியும் ஒருவித வெறிச்சோடலும் இருந்தது.
ஜெயம் தியேட்டருக்கு அருகே மூடிய நிறுவனமொன்றின் வாசலில் கவிஞர் பி.ஜி.சரவணன், பேராசிரியர் பெரியசாமி ராஜா உள்ளிட்ட நண்பர்கள் நிறையபேர் வந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் புதிய முகங்கள். இளைஞர்கள். குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் அதிகமாக இருந்தார் கள். அவர்கள் முகத்தில் ஆர்வம் இருந்தது. அங்கிருந்து எப்போது கிளம்புவோம் என்ற ஆவலும் இருந்தது. கடந்தமுறை வந்த நண்பர்களில் பலர், இந்த முறை வாய்ப்பைத் தவறவிட்டவர்களானார்கள்.
என்றபோதும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், முத்துக்கிருஷ்ணன், பேராசிரியர் பெரியசாமி ராஜா, ஐதராபாத் சுந்தர்ராஜன், தக்ஷிணா மூர்த்தி, பி.ஜி.சரவணன், மல்லிகை புத்தக நிலையம் சுரேஷ், கட்டுரையாளர் அசோக், ஹலோ எப்எம் ஷாஜஹான், அவரது புத்திரர்கள், ஸ்ரீராம் ஜனக், கல்யாணி, பாரதி பாண்டியன், ஸ்ரீவித்யா, அண்ணாமலைப் பல்கலை வரலாற்றுத்துறை கண்ணன், மதுரைக் கல்லூரி பேராசிரியர் இரத்தினக் குமார், ஓவியர் மதுரை பாபு, நெல்லை மருத்துவக் கல்லூரி அதிகாரி இளங்கோ கண்ணன் என்று இதமான நண்பர்களின் கூட்டம் இருந்தது.
நகரெங்கும் ஊர்வலங்களாகப் பார்த்துப் பழக்கப்பட்டிருந்தபோதும், நாமே ஊர்வலம்போல் கிளம்பியது, ரசனையாகத்தான் இருந்தது. கார்களும், இரு சக்கர வாகனங்களுமாக நமது ஊர்வலம் தொடங்கியது. நகரின் பிற பகுதிகளிலிருந்து வந்த நண்பர்கள் மனைவி, மக்களுடன் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் முன்பாக நின்றிருந்தார்கள். விருதுநகரிலிருந்து பசுமை நடைக்காக வந்திருந்த நண்பர் வேல்முருகன், தனது சகா திருப்புவனம் பாலாவுடன் பேருந்து நிலையம் எதிரிலுள்ள தேநீர் கடையில் இருந்தார்.
மலையின் வடக்குப் பக்கம் ஊர்வலமாக நாம் போனபோது, ஊர்க்காரர்களுக்கு ஒரே ஆச்சரியம். "ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக எங்கே போகிறார்கள்?" என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள். "சினிமா சூட்டிங்கா?" என்று ஆவலில் பொங்கினார்கள்.
"சமணர் படுகையைப் பார்க்க!" என்று நம்மிடமிருந்து அவர்களுக்குக் கிடைத்த பதில், அவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. "அங்கே என்னாருக்கு?" என்று திரும்ப நம்மிடமே கேட்டார்கள். வசிக்கும் இடத்தின் அருமைகூட தெரியாதவர்களாகவே நாம் இருக்கிறோம்.
சமணர் படுைக்குச் செல்லும் பாதை, தார்ச்சாலையிலிருந்து இடது பக்கமாக இடுங்கியிருக்கும் குடியிருப்புக்கு ஒட்டிய ஒத்தையடிப் பாதையாக நீண் டது. கருவேல முள் மரங்கள், காட்டுச் செடிகள், பெயர்த் தெரியாதக் குத்துச் செடிகளுக்கு இடையில் எலுமிச்சம் புற்கள் நிறைந்திருந்தன. அவை ஒன்றுடன் ஒன்றாய் உரசும்போது எழுந்த எலுமிச்சம் வாசம் இதமாக இருந்தது.
மலைக்கு அருகிலிருந்து படுகைக்குச் செல்ல படிகள் கட்டப்பட்டிருக்கின்றன. மற்றபடி, வழுக்குப் பாறைகளில் படிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஏறுவது சாகசமாகத்தான் இருந்தது. குழந்தைகள் ஆர்வமாக ஏறினார்கள். ஐம்பது வயதைத் தொட்டவர்கள் சற்றே பம்மினார்கள். மலையேறும் சாகசத்துக்கு நண்பர்களே வாலண்டியர்களாக மாறி கைகொடுத்து, அழைத்துச் சென்றார்கள். ஆங்காங்கே வழுக்குப் பாறைகளுக்கு அருகில் பிடித்துக்கொண்டு மேலே ஏற கம்பிப்பிடி இருந்தது, சற்று ஆறுதல் தந்தது. மலை மீது, மக்கள் திரள் ஊர்ந்து செல்வது போலிருந்தது, கூடியிருந்தவர்கள் ஏறிச்சென்ற காட்சி.
திருப்பரங்குன்றம் மலையின் இடுப்பில் சமணர் படுகை இருக்கிறது. படுகைக்கு முன்னே குடைவுபோன்ற ஓரிடத்தில் சின்னதாய் ஒரு சுனை இருக் கிறது. நீர்நிறைந்து அந்த சுனை காணப்படுகிறது. வெளியே முன்னிரவு துவங்கிய மழையின் ஈரம் இருந்தாலும் உள்ளே கதகதப்பாக இருந்தது. தண்ணீரும் சற்று வெதுவெதுப்பாகத்தான் இருந்தது. இயற்கை நமக்கு அளித்த சீதனம் இது. இதைத்தான் நாம் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
மலையேறிய அத்தனைபேருமே படுகைகளில் அமர்ந்தும், படுத்தும் அதனுடன் தங்களை தகவமைத்துக் கொண்டது, முற்காலத்தின் தொடர்ச்சியாக உணர முடிந்தது. கூடியிருந்தவர்களின் முன்னிலையில் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், குகைத்தளம் குறித்து எடுத்துக் கூறினார். திருப்பரங் குன்றத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டுவரை சமணம் இருந்துள்ளது. இங்கு கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் சமணப்பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. 'அந்துவன்' என்ற பெயர் இங்குள்ள கற்படுகைகளில் தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது தொடங்கி இடத்தின் பெருமைகளை விளக்கிப் பேசினார்.
அங்கிருந்து கீழிறங்கும்போது, சூரியன் வெப்பக் கதிர்களை பூமியெங்கும் பரப்பியிருந்தான். வெயில்பட்டு திருப்பரங்குன்றம் கண்மாய் உருக்கி ஊற்றிய வெள்ளியாய் தகதகத்தது. தரைக்கு வந்து மலையை நிமிர்ந்து பார்த்தபோது, அது அமைதியாக இருந்தது.
அடுத்து மலையின் தென்புறமிருக்கும் குகைக் குடைவுக்குச் சென்றோம். அங்கே போனபோது கந்த சஷ்டி விழா நடந்து கொண்டிருந்தது. ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் உச்சஸ்தாதியில் பாடிக் கொண்டிருக்க, கூடியிருந்தவர்களில் சிலருக்கு சாமி வந்தது. ஆடினார்கள். நான் ஸ்டாப் ஆட்டம். சினிமாவின் ரம்யா கிருஷ்ணன் சாமிகளும் நமீதா சாமிகளும் தோற்றார்கள். ஒப்பனையில்லாத ஆட்டம்.
மலை, தொல்லியல் சாதனம். குடைவு, பாரம்பரியமான வரலாற்றுத் தளம். அங்கு மதமாச்சரியங்களுக்கு இடமில்லை. ஆனால் குடைவுக்கு முன்பிருந்த பரந்த வெளியில் ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. திருநகரில் ஒரு கட்டிடத்துக்கு காவலாளியாக இருக்கும் நபர் பூசாரியாகி, எல்லோருக்கும் விபூதி கொடுத்து காணிக்கை வாங்கிக் கொண்டிருந்தார். சத்தம் காதைப் பிளந்தது. பாரம்பரிய வரலாற்றுத் தளங்கள் மத விஷயங்களுக்கான தளங்களாக மாறுவது கண்முன்னே தெரிந்தது.
எங்களின் பயண கவனம் சிதறிப்போனது. குடைவை ஒட்டியிருக்கும் இடத்தில் நாங்கள் குழுமினோம். சிலைகளையும் குரங்குகளையும் வேடிக்கை பார்த்தோம். புகைப்படங்கள் எடுத்தோம். அங்கும் சிறு உரை இருந்தது.
பின்னர் காவல் தெய்வம் கோவில் அருகிருந்த வெளியில், காலைச் சிற்றுண்டி உண்டுவிட்டு கலைந்தோம்.
நேற்றுவரை இழந்தது இழந்ததாகவே போகட்டும். இனிமேலாவது, இருப்பதை இழந்துவிடாமல் பாதுகாப்போம். அதற்காக அனைவரும் ஒன்று கூடுவோம்.

Thursday, October 20, 2011

அதிகாரத்தின் வாயிலாக நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதம்

எஸ்.அர்ஷியா

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதையடுத்து,

பரமக்குடியில் நடந்த சாலை மறியல் வன்முறையாக உருவெடுத்தது. அப்போது காவல்துறை 6 பேரை சுட்டுக் கொன்றது.

அதிகாரத்தின் வாயிலாக நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதம் குறித்து ஆய்வுசெய்ய, சமூகப் பொறுப்பும் படைப்பு மனமும் கொண்ட பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், ஆய்வு மாணவர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்,, எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, அ.முத்துக்கிருஷ்ணன், ரேவதி, சந்திரா, கவின்மலர், ஓவியர் சந்துரு, வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், பகத்சிங், மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்றப் பதிவாளர் பரமக்குடி ந.சேகரன், எஸ். அர்ஷியா உள்ளிட்டோர் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தங்கள் மன வருத்தத்தை வெளிப்படுத்தினர். சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய் தனர். அதிகாரிகளை சந்தித்துப் பேசினர்.

அதையொட்டி எழுதப்பட்டக் கட்டுரை இது...

ஆதிக்க சக்திகளின் எண்ணங்களும்...
சாதியத்தின் வீரியமும்...

அதிகார வன்முறை

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 - ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியம் குறித்த விவாதம் நடந்தது. காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா, விவாதத்திற்கு பதிலளித்துப் பேசினார். குரலில் பெருமிதம் இருந்தது. அவர் பேசியது, இது தான். "மெட்ராஸ் போலிஸ் முறையாக அமைக்கப்பட்டு, ஒண்ணரை நூற்றாண்டு ஆகின்றது. இன்றைய தமிழகக் காவல்துறை நவீனமடைந்துள்ளது. மரபான பாரம்பரியமும் கொண்டுள் ளது. 1991 முதல் 1996 வரை நான் முதல்வராக இருந்த எனது முதல் ஆட்சியின் காலகட்டத் தில்தான் மாநிலக் காவல்துறை நவீனமாக்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்தவர் கள் முதிர்ந்த மனிதத்துடனும் நவீனத்துவத்துடனும் பொதுமக்களைக் கனிவாக அணுகி, அவர் களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுவருகிறார்கள்!"

அவர் பேசி, சரியாகப் பத்தொன்பது நாட்கள்தான் கடந்து போயிருக்கின்றன. முதல்வர் தமிழக சட்டப்பேரவையில், என்ன சொல்லி மகிழ்ந்துப் பேசினாரோ, அதற்கு நேர்மாறாக மிருகவெறி யுடனும் நவீன ஆயுதங்களுடனும் கூடியிருந்த பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேரைக் கொன்று, செப்டம்பர் 11 ஆம் தேதி பகல் 12 மணியளவில், முதல்வரின் பெருமிதத் தைச் சிதைத்து அவமரியாதைக்கு உள்ளாக்கியது, தமிழகக் காவல்துறை.

1957 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி, பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டுவிட்டு இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய இமானுவேல் சேகரனை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. படுகொலை செய்யப்பட்ட அந்தநாளை, தேவேந்திர குல வேளாள மக்கள், 'ஆதிக்க சக்திகளிடமிருந்து தங்கள் சமூகம் மீளப்பெற கடுமையாக உழைத்த' இமானுவேல் சேகரனின் நினைவுநாளாக, கடந்த 54 ஆண்டுகளாக அனுசரித்து, அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டு வந்தது.

இமானுவேல் சேகரனின் கல்லறை, பரமக்குடி நகரின் பேருந்து நிலையத்தையடுத்த ஒரு குறுகிய தெருவின் கடைசியில், ரயில் தண்டவாளத்துக்கு முன்புள்ள பராமரிக்கப்படாத ஒரு கல்லறைத் தோட்டத்துக்குள் இருக்கிறது. பிற சாதித் தலைவர்களின் நினைவிடங்களைப் போல, தனித்த இடமாக அது இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக, சுயம்புவாக உருவாகிய அந்தத்தலைவரின் சமாதிகூட மக்களிடமிருந்து அந்நியப்படாமல், மற்ற சமாதி களுக்கு இடையிலேயே இருக்கிறது.

நினைவு தினத்துக்கு, முதல்நாளிலிருந்தே தேவேந்திர குல வேளாள மக்களும் அரசியல் கட்சி களின் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் வரத்துவங்கினார்கள். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார்கள். அதுபோலத்தான் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தின் தலைவர் ஜான் பாண்டியன் செப்டம்பர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அஞ்சலி செலுத்தப் புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். அவருக்கான நேரம் மாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை காவல்துறையால் அனுமதிக்கப்பட்டிருந்தது. முன்கூட்டியே வழங்கப்பட்ட அனுமதி யையொட்டித்தான் அவரது பயணம் அமைந்தது.

புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே ஜான் பாண்டியன் காவல் துறையினரால் வழி மறிக்கப்படு கிறார். அவரது பயணத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது.

காரணமற்றத் தடையைக் கண்டித்து, ஜான் பாண்டியன் வாக்குவாதம் செய்து, பயணத்தைத் தொடர முயற்சி செய்தபோது, அவர் கைது செய்யப்படுகிறார். ஏற்கனவே முறையான அனுமதி வழங்கியிருந்தக் காவல்துறை, அவரது கைதுக்கு இப்போது சொன்ன புதிய காரணம்: 09-09-2011 அன்று கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன் பழனிக்குமார் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த ஜான் பாண்டியன் செல்லக்கூடும். சென்றால்... அதனால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும்.

மண்டல மாணிக்கம் எனும் ஊருக்கு அருகேயுள்ள பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தங்க வேலு என்பவரின் மகன் பிளஸ் ஒன் மாணவன் பழனிக்குமார், அருகேயுள்ள முத்துராமலிங்க புரத்தில் நடந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு நள்ளிரவில் ஊர் திரும்பும்போது 09-09-2011 அன்று கொலை செய்யப்பட்டார். இப்படியான அசம்பாவிதங்கள் நடந்துவிடும்போது பாதிக்கப் பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று தலைவர்கள், பிரமுகர்கள் ஆறுதல் சொல்வது வழக்கத்தில் உள்ளது. அதைத் தடைசெய்வதுபோல காவல்துறையின் புதிய காரணம் உள் அர்த்தம் கொண் டதாக இருக்கிறது.

இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு முன்பாக, தேவேந்திர குல வேளாளச் சமூகத்தைச் சேர்ந்த யாரையாவது, பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்து, மாவட்டம் முழுவதும் பதற்றத்தை உருவாக்கிவிடுவது நீண்டகாலமாகவே வழக்கத்தில் இருந்துவருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பது சற்றே ஆறுதல் தரும் விஷயம்.

ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதுடன் மாவட்டம் முழுவதும் 144 தடை விதிக்கப் படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்களுக்கு தெரியவந்ததும், அவர்கள் ஜான் பாண்டியனை விடுதலை செய்யக் கூறி, பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் கூடுகிறார்கள். ஐந்து முனை ரோடு என்பது பரமக்குடி நகரின் இதயப் பகுதி. பிற மாவட்டங்களிலிருந்து மட்டுமன்றி உள்ளூர்காரர்களே நகருக்குள் நுழையவும் வெளியேறவும் அந்த இடத்தைக் கடந்துதான் ஆகவேண்டும்.

ஏற்கனவே அந்த இடத்தில் காவல்துறையின் உயர் அதிகாரியிலிருந்து சாதாரணக் காவலர் வரை குவிந்து நிற்கிறார்கள். கூட்டத்தின் மீது தண்ணீர் பாய்ச்சிக் கலைக்கும் வஜ்ரா வாகன மும் அங்கிருக்கிறது. சென்னையிலிருந்து சிறப்புச் சேவைக்காக செந்தில்வேலன் எனும் காவல் அதிகாரியும் வந்திருந்தார்.

ஜனநாயக ரீதியில் தங்கள் தலைவரை விடுதலை செய்யக் கூறி, சாலை மறியல் செய்வதெல் லாம் எங்கேயுமே சகஜமான ஒன்றுதான். இதற்கு முன்பும் பல இடங்களில் பலமுறை நடந்திருக் கிறது. அதுதான் பரமக்குடியிலும் நடைபெற்றது.

144 தடையைப் பற்றி அறியாத பொதுமக்கள், ஜான் பாண்டியன் ஆதரவாளர்களின் சாலை மறியலை வேடிக்கைப் பார்த்தபடியே கடந்துபோகிறார்கள். அவர்களின் அன்றாடப் பாடு ஒன்றும் அங்கே தடைபடவில்லை. செய்தி கேள்விப்பட்டு ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் மேலும் சிலர் அங்கே கூடுகிறார்கள். அப்போதும்கூட குவிக்கப்பட்டிருந்தக் காவலர்களின் எண்ணிக்கைதான் அங்கே அதிகமாக இருந்தது. காவலர்களின் எண்ணிக்கை சாலை மறியல் செய்தவர்களுக்கு மிரட்சியைத் தந்தாலும் அவர்கள் மிரண்டு கலையவில்லை. விடுதலை செய்யச் சொல்லி தொடர்ந்து குரல் எழுப்புகிறார்கள்.

அப்போது பரமக்குடி காவல் ஆய்வாளர் சிவகுமார், ஆயுதப்படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன், துணை ஆணையர் செந்தில் வேலன் ஆகியோர் அவர்களைக கலைந்துபோகச் சொல்லி பேசினார்கள். அவர்கள் கலைய வில்லை. உரிய அதிகாரிகளை வைத்து பேச்சு வார்த்தை எதுவும் அவர்களிடம் நடத்தாத காவல் துறை அதிகாரிகளில் செந்தில் வேலன், நிராயுதபாணியாக இருந்து சாலை மறியல் செய்தவர் கள் மீது திடீரென்று தாக்குதலைத் தொடங்கியதும் மற்றவர்கள் எதிரே இருந்தவர்களை ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டனர். இதை எதிர்பார்த்திராத சாலைமறியல் செய்தவர்கள் நாலா புறமும் சிதறி ஓடி... கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து காவல்துறை ஆட்கள் மீது எதிர்தாக்குதல் நடத்த...

திடீரென்று துப்பாக்கிகள் முழங்கும் சத்தமும், போலிஸ் பூட்ஸ்களில் கல்லும் மண்ணும் நெறிபடும் சத்தமும் ஒருபுறம் எழ, மறுபுறம் குண்டடிபட்டுக் கீழேவிழுந்து கதறும் ஓலமும், அதைப் பார்த்து மரண பீதியில் அலறிக்கொண்டு மக்கள் ஓடும் அவலமும் நடந்தேறியது.

மக்கள் சகஜமாக வந்துபோய்ப் புழங்கிக் கொண்டிருக்கும் ஓரிடம், கொஞ்ச நேரத்தில் காவல் துறையினரால் எதிர்த்து நிற்க ஆளில்லாதப் போர்க்களமாக ஆக்கப்பட்டிருந்தது. ஐந்து முனை ரோட்டில் எங்கு பார்த்தாலும் கற்கள். அறுந்த செருப்புகள். கிழிந்த ஆடைகள். அடித்து உடைக் கப்பட்ட சைக்கிள்கள். இருசக்கர மோட்டார் வாகனங்கள். கிழித்து வீசப்பட்டு கொழுந்துவிட்டு எரிந்த பிளக்ஸ்கள். கிழித்துக் கொண்டுவரப்பட்ட பிளக்ஸ் துணிகளால் மூடப்பட்ட பிணங்கள். துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு, தங்கள் சொந்தவேலை விஷயமாக ஐந்துமுனை ரோட்டைக் கடந்து, சாலை மறியலை வேடிக்கைப் பார்த்தபடி போனவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தார்கள்.

உக்கிரமடைந்தக் காவல்துறை கண்ணில்பட்டவர்களையெல்லாம் விரட்டிவிரட்டி அடித்தது. மண்டை உடைந்தவர்கள்; கைகால்களில் சதை பிய்ந்துத் தொங்கியவர்கள்; கால் உடைந்தவர் கள்; புட்டத்திலும் முதுகிலும் அடிவாங்கி அலறியபடி ஓடி ஒளிந்தவர்கள்; கை ஓயாத காவல் துறை நகரின் நாலாபக்கமும் சுழன்று அசுர ஆட்டம் ஆடியது.

காக்கித் தாண்டவம் முடிந்து நகரம் நாசமாகி வெறிச்சோடியபோது, ஊருக்குள் வந்தவர்களைத் தேடி வரும் உறவினர் கூட்டம் பதற்றத்துடன் ஒவ்வொரு இடமாய் அலைந்து திரிந்தது. காயம் பட்டவர்களையோ... குண்டடிபட்டுச் செத்துக் கிடந்தவர்களையோ... அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் வருவதற்கு முன்பாகவே அடையாளமற்றுச் செத்துக் கிடந்த வர்களை ஆளுக்கு ஒரு கைபிடித்து காவல்துறையே அப்புறப்படுத்தி, அங்கிருந்த பிளக்ஸ் களையே கிழித்து மூடிப்போட்டிருந்தது. தரையில் பிளக்ஸ்களுக்குக் கீழே மறைக்கப்பட்டிருந்த பிணங்கள் யார் கண்ணுக்கும் தட்டுப்படவில்லை. அவர்கள் வேறு இடங்களைத் தேடியோ... 'அப்பாடா... நம்மாளுக்கு ஒண்ணும் ஆகலை' என்றோ ஆறுதல்பட்டுக்கொண்டு போனார்கள். ஆனால் அந்த ஆறுதல் நெடுநேரம் நீடிக்கக் கூடியதாக இருக்கவில்லை.

நடந்த முடிந்த இந்த சம்பவம் இருவேறு சாதிகளுக்கு இடையிலான மோதல் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அதற்கான பலிகளும் இல்லை. இது கைது செய்யப்பட்ட தலைவரை விடுதலை செய்யச் சொல்லி, சாலை மறியல் செய்த தேவேந்திர குல வேளாள மக்கள் மீது காவல்துறை நடத்திய அதிகாரத் தாக்குதல்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அருகிலி ருக்கும் பசும்பொன்னில் நடக்கும் உ.முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை, அரசு விழாவாக நடத்தப்படுகிறது. அதற்கு தமிழகத்திலுள்ள அத்தனை அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிறமாநில அரசியல் பிரமுகர்களும் வந்துபோகிறார்கள். திமுக தலைவர் மு.கருணாநிதியும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தவறாமல் வந்து செல்வதை வழக்கமாக வைத் திருக்கிறார்கள். திமுக தலைவர் மு.கருணாநிதியால் முடியாதுபோனால் தனது அரசியல் வாரிசு மு.க. ஸ்டாலினை அனுப்பி வைப்பதும் வழக்கத்தில் உள்ளது. முக்குலத்தோர் என்று அழைக்கப்படுபவர்களின் வாக்கு வங்கி அத்தனை முக்கியமானதாக இருக்கிறது.

அதேவேளையில் அதிமுக முக்குலத்தோர் கட்சி என்றே அழைக்கப்படுகிறது. அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கார் மீது பசும்பொன்னில் வைத்தே சில ஆண்டுகளுக்கு முன்பு கல்/செருப்பு எறியப்பட்டது. அதற்குக் காரணம் முக்குலத்தோர் வைத்த கோரிக்கை ஒன்றை அவர் நிறைவேற்றவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்த விழாவின்போது, அருகிருக்கும் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் போன்ற இடங் களில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். எங்கோ மழைபெய்து வேறெங்கோ வானவில் தெரிவது போல பதற்றத்துக்கு பயந்து, அன்றைய தினம் கடைகள் அடைக்கப்பட்டுவிடும். பள்ளிகளுக்கு விடுமுறை. அலுவலகங்களுக்கு பணியாளர்கள் வந்தால் வேலைநாள். வராவிட்டால் விடுமுறை நாள் என்றாகிவிடுகிறது. இயல்பு வாழ்க்கை தொலைந்து போகிறது.

இந்த விழாவுக்கு போகும்போதும் வரும்போதும் வழியிலுள்ள தேவேந்திர குல வேளாள மக்கள் வசிக்கும் காலனிகள், கிராமங்கள், ஊர்கள், தெருக்கள் தாக்குதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆபாச, அருவருப்பானச் செய்கைகளுக்கும் உள்ளாகும். சில இடங்களில் அபூர்வமாகத் தட்டிக் கேட்கும் காவல்துறையும்கூட தாக்குதலுக்கு உள்ளானதுண்டு. அந்த நிலையிலும் அது அரசு விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கத்திலுள்ளது.

முக்குலத்து இனமக்கள் உ.முத்துராமலிங்கத் தேவரை வழிபடுவதுபோல தேவேந்திர குல வேளாள மக்கள் இமானுவேல் சேகரனை வழிபடத் துவங்கியுள்ளனர். மக்கள் தொகை எண்ணிக்கையில் முக்குலத்தோரைக் காட்டிலும் தேவேந்திர குல வேளாள மக்களே அதிகமாக உள்ளனர். அவர்கள் தங்கள் இனத் தலைவராகக் கொண்டாடப்படும் இமானுவேல் சேகரனின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

1988 ஆம் ஆண்டிலிருந்து தியாகி இமானுவேல் பேரவை, நினைவு நாளை அனுசரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு இமானுவேல் சேகரனின் கல்லறைக்கு வந்து அஞ்சலி செலுத்து பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது, அவர்களை அடிமைப்படுத்தி வைத் திருந்த ஆதிக்க சக்திகளின் கண்ணில் பொறாமையையும் நெஞ்சில் ஆற்றாமையையும் உருவாக்கியிருக்கிறது.

முக்குலத்தோர் நாலைந்து கிராமங்களை ஒன்றுசேர்த்து 'நாடு' என்று அழைப்பது வழக்கம். அப்படி பலநாடுகள் ராமநாதபுர மாவட்டத்தில் உண்டு. அதில் முக்கியமான ஒரு நாடு, ஆப்ப நாடு. அங்கு ஒரு சங்கம் உண்டு. அதன்பெயர் ஆப்பநாடு மறவர் சங்கம். அந்த சங்கம் சில நாட்களுக்கு முன்பு தனது சாதியினருக்கு ஒரு சுற்றறிக்கை விடுகிறது. நீண்டு செல்லும் அந்த அறிக்கையில் தேவர் குருபூஜையை சிறப்பாக நடத்தும் ஆலோசனைக் கூட்டம் என்று சொல் லப்பட்டிருந்தாலும் அதனூடாக இரண்டு தீர்மானங்களைச் செயல் வடிவாக்கும் அறிவிப்பாக அது இருக்கிறது. ஒன்று: ஆண்டு தோறும் அதிகரித்துவரும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கான கூட்டம் பற்றிய பொருமல். இரண்டு : இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பு செய்யவிடாமல் அரசைத் தடுப்பது குறித்துப் பேசுதல் என்று போகிறது. அங்கிருக்கும் பலநாடுகளின் சங்கங்களும் இதுபோன்ற தீர்மானங்களை நெடுநாட் களாகவே கையில் வைத்திருக்கின்றன.

இந்தத் தீர்மானங்களுக்கு அல்லது வரைவுகளுக்குப் பின்னாலிருக்கும் சாதி அரசியல் மிக முக்கியமானது. தேவேந்திர குல வேளாள மக்கள் மீது முக்குலத்தோர் செலுத்தி வந்த ஆதிக்கம் இப்போது பெருமளவில் செல்லுபடியாவதில்லை. அவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளா தார நிலைகளில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். சமூகத்தின் பிறநிலைகளில் தேவேந் திர குல வேளாள மக்களுக்கு சமூக மதிப்பு கிடைத்துவருவது முக்குலத்தோருக்கு கலக்கத் தைத் தருவதாகவும் இருக்கிறது. சாதியத்தின் பேரில் இதுவரை நடந்துவந்த முக்குல ஆதிக்க அரசியலையும் அதன் மூலம் கிடைத்துவந்த அதிகாரத்தையும் சுயசாதி பெருமிதத்தையும் இழக்கச் செய்வதாக இருக்கிறது.

அப்படி இழக்கும்போது புதிதுபுதிதாய் யோசிப்பதும், குறிப்பாய் மாற்று சமூகத்துத் தலைவர் களின் சிலைகளை, போஸ்டர்களை அவமதிப்பதும், உடைப்பதும், செருப்பு மாலைகள் சூட்டு வதும், அதன் வாயிலாகக் கலவரங்களுக்கு வழிவகுத்து உயிரைப் பறிப்பதுமாக, சாதியத்தின் இழிவான அரசியல் பன்முகம் காட்டியிருக்கிறது. காட்டியும் வருகிறது. இது எல்லோருக்குமே பொதுவான ஒன்று. அதன் மூலம் சாதியத்தின் கூர்முனை மழுங்கடிக்கப்படாமல் பாதுகாக்கப் படுகிறது. அதுதான் சாதியத்தின் மூலதனம். மூலதனத்தை அரச அதிகாரத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறார்கள். அல்லது இருக்க வைக்கப்படுகிறார்கள். இதற்கு இறந்துபோன தலைவர்களின் காலகட்டத்தில் நிலவிய வன்மத்தின் வெப்பம், பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்பட்டு, அதிகார வேட்கையுடன் திரிபவர்களால் அரசியலுக்கு தீ மூட்டி பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்தில், நடிகர் விக்ரம் நடித்த ஒரு திரைப்படம் 'தெய்வத் திருமகன்' என்ற பெயரில் வெளி யாவதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தெய்வத் திருமகன் என்ற பெயரில் அந்தப் படம் வெளி யாகக் கூடாது என்பதில் ஆதிக்க சக்திகள் மும்முரம் காட்டினார்கள். கவனமாக இருந்தார்கள். தெய்வத் திருமகன் என்ற அடைமொழி முத்துராமலிங்கத் தேவருக்கு மட்டுமே உரியது என்று வாதாடப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்புதான் அந்தப் படம் திரையிட அனுமதிக்கப் பட்டது. அதன் ஒரே காரணம் நடிகர் விக்ரம் தேவேந்திர குல வேளாள இனத்தைச் சேர்ந்தவர். அவர், தெய்வத் திருமகன் என்ற பெயரில் நடிப்பதை ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை. அதேவேளையில் தேவர்மகன் என்றொரு படம். ஆதிக்க மூலசக்தியான அய்யங்கார் வகையைச் சேர்ந்த கமலஹாசன் நடித்து வெளியிடப்பட்டது. மிக உயர்ந்த (?) மேட்டுக்குடியைச் சார்ந்த ஒருவரால் நடிக்கப்பட்டு, தங்கள் தலைவர் பெருமிதப்படுத்தப்படுகிறார் என்பதாலேயே அந்தப் படத்துக்கு முக்குலத்தோர் சமூகம் முழு ஆதரவு தந்ததை இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

சாதியத்தை பெரியார் தன் இறுதிமூச்சுவரை சாடியதுடன் சாதியத்துக்கு எதிரானப் பிரச்சா ரத்தை செய்து வந்தார். அவர் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் சரி... அவ்வப்போது அவர் பெயரைச் சொல்லி ஆட்சி செய்பவர்களும் சரி... சுயலாப அரசியலின் இழிவான சாட்சியத்தின் ஆட்சியைத்தான் செய்துவருகிறார்கள். திராவிடக் கட்சிகள் இரண்டுக் குமே சாதியக் கட்சிகளின் தேவை அதிகமாக இருக்கின்றது. தேவையின்போது வரையறுக்கப் பட்ட, திட்டமிட்ட செயல்களால் அரசே வன்முறையை செய்து முடிக்கிறது. அல்லது செய்பவர் களை செய்யவிட்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறது.

பரமக்குடி சம்பவத்தில், அதிகாரத்தின் வாயிலாக அரச பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவு மேலிருந்து வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மைக் கருத்தா... உலவவிட்டக் கருத்தா... என்று ஆராயும் தருணம் இதுவல்ல. என்றாலும் நிறைய சந்தேகங் களையும் மேலிருந்து வந்ததாகச் சொல்லப்படும் கருத்து பூடகமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. தொடர்ந்து கீழிருந்துக் கொடுக்கப்பட்டு வந்த முக்குலத்து அழுத்தம் மேலிடத்தின் நிழலை அசைத்திருப்பதையும் அதன் மூலம் இந்த சம்பவத்துக்கான இசைவு வழங்கப்பட்டதாகவும் முக்குலத்தோர் பரிமாறிக் கொள்ளும் விஷயங்களிலிருந்து உணர முடிகிறது.

பரமக்குடி பயங்கரத்தில் மூன்று உயிர்கள் காவல்துறையின் குண்டுகளுக்கு சம்பவ இடத்தி லேயே பலியாகியிருக்கின்றன. இரண்டு உயிர்கள் சதை பிய்ந்து எலும்புகள் முறிந்து வாதை யினால் செத்துப்போயிருக்கின்றன. ஓர் உயிர், சம்பவம் நடந்து ஆறேழு மணி நேரத்துக்குப் பின்பு பரமக்குடியிலிருந்து அள்ளிக்கொண்டு செல்லப்பட்டு, வழியில் இளையாங்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனத்திற்குள் கிடந்து பரலோகம் போயிருக் கிறது.

இந்தப் படுகொலைகளுக்கானப் பின்னணி அரச அதிகாரத்தின் உளவியலிலிருந்து பிறந்திருப் பது கண்கூடு. இதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளின் ஒட்டுமொத்த எதிர் தாக்குதலாகத்தான் காவல்துறையின் இந்த ப(லி)ழிவாங்கலோ என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

கைதுசெய்யப்பட்ட தங்கள் தலைவரை விடுதலை செய்யச் சொல்லி மக்கள் திரள்வது வாடிக்கை. அப்போது உணர்வெழுச்சி உருவாவதும் இயற்கைதான். வன்முறைக்கான சாத்திய மும் உண்டு. அப்போது உருவாகும் வன்முறைப் போக்கைக் கலைப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அதன் இறுதிவடிவம்தான் துப்பாக்கி. ஆனால், அங்கு திரண்ட மக்களின் உணர்வெழுச்சியான வன்முறைப் போக்கிற்குத் தீர்வாக, காவல்துறை உடனடியாகத் துப்பாக்கிகளை கையாண்டிருக்கிறது. இது எதன் பொருட்டும் ஏற்புடையதும் அல்ல. துப்பாக்கியை எடுத்த எடுப்பிலேயே கையாண்டதன் மூலம் காவல்துறை சாதித்தது : ஆறு உயிர்களைக் கொன்றது மட்டும்தான். இதில் அதிகார முகத்தின் /ஆதிக்க சாதி முகத்தின் பிம்பம் தெரியவே செய்கிறது. மக்களாட்சி தத்துவத்தின் முகத்திரை ஜனநாயகம் கிழிந்து தொங் குகிறது.

இந்த பயங்கரத்தில் பலியானவர்கள் குறித்தத் தகவல்கள் மிகவும் வேதைன தருவதாக இருக் கிறது. அதிகார ஆணவத்தால் குண்டுகளை உமிழும் துப்பாக்கிகளுக்கு சுடப்படுபவர் வன் முறையாளரா என்று பார்க்கத் தெரியாது. ஆனால் அதை இயக்குபவரால் கண்டறிய முடியும். இங்கே துப்பாக்கிக்கும் அதை இயக்குபவருக்கும் தேவை, சுடப்படுவதற்கு உடல்கள் மட்டுமே. காரண காரியத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம். சொல்வதற்கு எளிதான வாசகங்கள் உண்டே. 'திரண்டிருந்த வன்முறையாளர்கள் எங்களைத் தாக்கினார்கள். நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களைச் சுட்டோம்'. ஆனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே சம்பவங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத, வன்முறையில்லாத மனிதர் களாகவே இருந்திருக்கிறார்கள்.

ஒருபுறம் ஆதிக்க சாதி நடத்தும் குருபூஜையை அரசுவிழாவாகவே நடத்தி அவர்களை ஆற்றுப் படுத்தும் அரசு, அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்வுகளின்போது உருவாகும் வன்முறையை அனுமதிக்கும அரசு, ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிய கிளர்ச்சியை, அதுவும் கைது செய்யப்பட்ட தங்கள் தலைவனை விடுதலை செய்யச் சொல்லி கிளர்ச்சி செய்யும்போது தடாலடியாக துப்பாக்கிகளைத் தூக்கச் செய்திருப்பது, கொடுங்கோன்மைக்கு சற்றும் குறைவில்லாததுதான். அதற்கு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசிய பேச்சு பக்கபலமாக இருந்திருக்கிறது.

செப்டம்பர் 11 பரமக்குடி சம்பவம் இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்ச னையல்ல. ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், ஆதிக்க சக்திகளின் எண்ணங்களும் சாதியத்தின் வீரியமும் மாறுவதேஇல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் துயரம் நிறைந்த வாழ்வும், அவர்கள் மீதான ஆதிக்க அதிகார வன்முறையும் எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மஞ்சூர் கிராமம். நாளொன்றுக்கு நாலாயிரம் வாகனங்கள் கடக்கும் பகுதி அது. அதிலிருந்து பிரியும் சாலையில் ஒருகிலோ மீட்டர் தூரத்திலேயே இருக்கிறது, மஞ்சூர் காலனி. மாவட்டத்துக்கே உரித்தான வறட்சியான கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். 19 வயது. பள்ளர் பிரிவைச் சேர்ந்தவர். பொன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. 18 வயது. வெள்ளாள வகுப்பைச் சேர்ந்தவர்.

ஜெயபால் காயத்ரியை விரும்பிக் காதலிக்கிறார். அதை ஜெயபால் வீட்டில் ஏற்கவில்லை. காயத்ரியின் அம்மாவே 'நல்ல பையனாக இருக்கிறான்' என்று சொல்லி மகளைக் கட்டி வைக் கிறார். ஒன்பது மாதமாகிறது, கல்யாணமாகி. இப்போது காயத்ரி ஒன்பது மாத கர்ப்பிணி. ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைச் சுமக்கிறது. தோள் கொடுக்க ஜெயபால்தான் இன்று இல்லை. மனைவியைப் பார்க்க பொன்னையாபுரம் போனவர், கலவரத்துக்குப் பயந்து ஒரு தெரு வில் ஓடிஒளிந்து, 'போலிஸ் துரத்துகிறதா?' என்று திரும்பிப் பார்க்க, காவல்துறையின் துப்பாக்கி கக்கிய குண்டு, அவர் நெஞ்சில் பாய்ந்து முதுகு வழியாக வெளியேறிவிட்டது.

ஜெயபால் அப்பா பாண்டி சொல்வதைக் கேட்போம். "துப்பாக்கியால போலிஸ் சுட்டு கலவரம் பண்ணிக்கிட்டுருக்குனு எங்களுக்குத் தெரியும். எங்க ஊர்க்காரங்க வந்து சொன்னாங்க. எங்கப் பையன் எந்தவம்பு தும்புக்கும் போகாதவன். அதனால போனவன் வந்துருவான்னு சும்மா இருந்துட்டோம். சாயங்காலம் அஞ்சு மணிவாக்குல பையனோட செல்லுலருந்து நம்பர் அடிச் சுச்சு. எடுத்து,'எங்கப்பா இருக்க?'ன்னு கேட்டேன். பேசுனது அவன் இல்ல. இன்ஸ்பெக்டர் சிவக்குமார்னு சொன்னாரு. எம்பையன் பேரு கேட்டாரு. சொன்னேன். ஊரு கேட்டாரு. சொன்னேன். போன் கட்டாயிருச்சு. எனக்கு பயமும் வந்துருச்சு. எதுக்கு போன் போட்டு கேக்க ணும்ன்னு நெனைச்சுக்கிட்டே பரமக்குடிக்கு ஓடுனா, அஞ்சு முக்கு அப்டிக் கெடந்துச்சு. அங்கன இருந்த போலிஸ்கிட்டக் கேட்டப்ப, 'கலவரம் செய்யச் சொல்லி அனுப்பி வைச்சுட்டு இப்ப வந்து எங்கக்கிட்ட கேக்குறியா?'னு என்னியவே கேக்குறாங்க. போ... போய் காட்டுப் பரமக்குடி ஆஸ்பத்திரில பாருன்னு சொன்னாங்க. அங்கன எம்புள்ளை இல்ல. புள்ளையக் காணாமேன்னு தேடுனப்ப அங்கனருந்த ஒரு ஆளு சொன்னாரு. செத்தவங்க கைகாலப் புடிச்சு செத்த நாய தூக்குற மாதிரி தூக்கிட்டுப் போனாய்ங்க. சாக்கடைக்குள்ளாற தேடிப் பாருன்னு. அங்கனயும் தேடுனேன். எங்கன பாத்தாலும் ரத்தம். ஆனா எம்புள்ளை அங்கன இல்ல. கொஞ்ச பேத்தை ராமநாதபுரத்துக்கு தூக்கிட்டுப்போனதா சொன்னாங்க. அலறிய டிச்சுக்கிட்டு ராமநாதபுர ஆஸ்பத்திரிக்கு ஓடுனா... அங்கன உள்ளேயே விடமாட்டேன் னுட்டாங்க. ராத்திரி முழுசும் அங்கனயே இருந்தோம். மறுநாள் திங்கக்கிழமை சாயங்காலம் அஞ்சு மணிக்குத்தான் எம்புள்ளையோட முகத்தையே பாக்க முடிஞ்சுது. அதுவரைக்கும் அது எம்புள்ளையா இருக்காது. எங்கிட்டுருந்தாச்சும் 'அப்பா'ன்னு சொல்லிக்கிட்டு வந்துருவான்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா மனசுல ஒரு ஓரத்துல நம்ம புள்ளையா இருக்குமோன்னு தவிப்பும் இருந்துச்சு. அங்கேருந்த இன்ஸ்பெக்டருக்கிட்ட ஒரு தடவை பாத்துருறேனேன்னு சொன்னதுக்கு, 'ஒம்மகன்னு என்னடா நிச்சயம்?'ன்னு என்னை உள்ளாறயே விடல. பாடிய போலிஸ்காரங்க 40, 50 பேர்வரைக்கும் கொண்டு வந்து குடுத்தாங்க. எரிச்சிறணும்னு சொன்னாங்க. அவங்கள ஊர் எல்லையிலேயே தடுத்துட்டோம். ஊருக்குள்ளாற வரவிடலை. பாடிய எரிக்கலைய்யா. பொதைச்சுட்டோம். ஆளு அப்டியிருப்பான். குண்டு தொலைச்சுதுல கையகலத்துக்கு சதை பிய்ஞ்சுபோயிருந்துச்சு"

பெற்ற பிள்ளையை இழந்த தந்தையின் கதறல் அப்படியென்றால், திருமணத்துக்குப் போன உறவுக்காரர் இருவரில் ஒருவர் குண்டடிபட்டுச் சாக, அதைப் பார்த்துத் திகைத்துப் போன சின்னாள் சொல்கிறார். "மதுரைல கல்யாணம். ஆர்த்தி ஓட்டல்ல சாப்பாடு. பத்துக்கெல்லாம் வெள்ளைச்சாமியும் நானும் பஸ் ஏறிட்டோம். ஓட்டப்பாலத்துக்கிட்டயே பஸ் நின்னுருச்சு. எல்லாரும் எறங்கி நடந்தாங்க. வெள்ளைச்சாமியும் நானும் எறங்கி நடந்தோம். எனக்கு எழுவது வயசு. கொஞ்சம் மெதுவா நடந்தேன். ஒரு நாலடி முன்னால வெள்ளைச்சாமி போனாரு. திடு திடுன்னு ஏழெட்டுப் பத்து போலிஸ்காரங்க ஓடியாந்தாங்க. கையில் தடி, லத்தின்னு வெச்சுக் கிட்டு, போற வர்ற ஆளுகளைக் கண்ணு மண்ணு தெரியாம அடிச்சாங்க. முன்னாலப்போன வெள்ளைச்சாமிக்கு செமத்தியா அடி. அடிபட்டவங்க எல்லாரும் தப்பி ஓடுறாங்க. நான் அடிக் காதீங்கன்னு கத்துனேன். எனக்கு குண்டில நாலு அடி. அடின்னா அப்டியொரு அடி. இதுக்கு முன்னால நான் அப்டியொரு அடி வாங்குனதே இல்ல. பக்கத்துல சாக்கடை. நான் அதுல குதிச்சு பக்கத்து வீட்டுக்குள்ளாற பூந்துட்டேன். கம்பிக்கதவு போட்ட வீடு. அங்கனருந்து பாத்தா என்னோட வந்த வெள்ளைச்சாமிய போலிஸ்காரங்க மாத்தி மாத்தி அடிக்கிறாங்க. அவரு மயங்கி விழுந்துட்டாரு. அங்கனயே வெயில்ல அவரு கெடந்தாரு. அவரு மயங்கிக் கெடக்குறதப் பாத்ததும் நான் பதுங்கியிருந்த வீட்லருந்து வெளியே வரலாம்ன்னு வந்தேன். வீட்டுக்காரங்க விடமாட்டேன்னுட்டாங்க. 'போனா... போலிஸ் அடிச்சுக் கொன்னுரும்'ன்னு என்னையத் தடுத்துட்டாங்க. அங்கனருந்து பாத்தா எல்லாமே தெரியுது. யாரோ ஒருத்தரு 'ஏம்ப்டி செய்றீங்க?'ன்னு கேட்டாரு. அவருக்கும் செமத்தியா அடி. போலிஸ்காரங்களே தீயணைக்குற தண்ணீ லாரிக்கும் ஊதாக்கலர் லாரிக்கும் தீ வெச்சுக்கிட்டாங்க. அப்ப அங்கன ஒரு ஆளையும் செமத்தியா அடிச்சாங்க. அப்புறமா ஒரு போலிஸ் லாரில அங்கன கெடந்தவங் களையெல்லாம் செத்த நாய்களை தூக்கிக் குப்பை லாரில வீசுற மாதிரி போட்டு எடுத்துக்கிட்டு போனாங்க. வெள்ளைச்சாமி கெடந்த எடத்துல அவரக் காணாம்''

மறுநாள் காலை பரமக்குடியிலிருந்து 6 மணிநேரம் நடந்தே ஊருக்கு வந்துவிட்ட சின்னாள், திங்கட்கிழமை மதியம் 1 மணிவாக்கில் நடந்த சம்பவத்தைச் சொல்ல, தொலைக்காட்சிப் பெட்டிகளும் அந்தச் செய்தியைச் சொன்னனவாம். சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சியாக சின்னாள் இருக்கிறார்.

வெள்ளைச்சாமியின் பிணம் பல இடங்களில் தேடியலைந்த பின், மதுரை ராஜாஜி மருத்துவ மனை சவக்கிடங்கில் இருப்பதாக சத்திரக்குடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தகவல் தந்தாராம். சத்திரக்குடி போலிஸ் ஏற்பாடு செய்து தந்த வேன் மூலம் மதுரைக்குப் போய் வெள்ளைச்சாமி யின் பிணத்தை வாங்கியிருக்கிறார்கள். அதற்கு போலிஸ் ஆறாயிரம் ரூபாய் வசூல் செய்து கொண்டதாம்.

மகன் கல்யாணத்துக்குப் பந்தக்கால் நட்டுவிட்டு, பத்திரிக்கை கொடுக்க பரமக்குடிக்குப் போன வர் பல்லவராயநேந்தல் கணேசன். அதிமுக பிரதிநிதி. அவர் வயிற்றில் பாய்ந்த குண்டும் முதுகு வழியாக வெளியேறியிருக்கிறது. சம்பவங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ஆட்கள் பலியாகியிருப்பது மட்டுமன்றி, பலியானவர்களெல்லாம் தேவேந்திர குல வேளாள மக்களாக மட்டுமே இருப்பதும் கேள்விக்கு உரியதாக இருக்கிறது.

பரமக்குடி சம்பவம் நடந்த அதேநேரத்தில் மதுரை சிந்தாமணி புறவழிச் சாலையிலும் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. அதில் இரண்டு பேர் படுகாயமடைந்தார்கள். இந்த இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவு அல்லது மனநிலை எங்கிருந்து அல்லது எப்படி உருவானது என்பது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது.
அன்று மாலை ஆறு மணியளவில் இளையாங்குடி காவல்நிலையம் அருகில் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. ஆனந்த் என்ற 16 வயது இளைஞர் கையில் குண்டு பாய்ந்து, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ என்பவரால் அந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி தியாகி இமானுவேல் பேரவையின் ஒன்றியச் செயலாளர் வி.முனியாண்டி சொல்கிறார். "எங்க அமைப்பு சார்பா மூணு பேனர்கள் வெச்சுருந்தோம். அதை போலிஸ் அறுத்து வீசிருச்சு. சம்பவத்தன் னிக்கு 54 வேன்கள்ல 1500க்கும் அதிகமான நாங்க பரமக்குடிக்கு புறப்படுறதுக்குத் தயாரா கிட்டு இருந்தோம். அப்ப எங்களுக்கு ஜான் பாண்டியன் கைது ஆனத் தகவல் வந்துருச்சு. அடுத்து துப்பாக்கிச் சூடு தகவலும் வந்துருச்சு. நாங்க இங்கேயே இருந்துக்கிட்டு அடுத்த என்ன செய்றதுங்க்ற தகவலுக்காகக் காத்துக்கிட்டு இருந்தோம். இந்தப்குதி முழுசும் போலிஸ் குவிஞ்சுருந்துச்சு. டிஎஸ்பி இளங்கோ இங்குட்டும் அங்குட்டுமா போய்வந்துகிட்டு இருந்தார். என்னியக் கூப்புட்டு எதுவும் செஞ்சுறாதீங்கன்னு வேற சொன்னாரு. நான் அதெல்லாம் எங்க ஆளுக எதுவும் செய்ற ஐடியால இல்லன்னு சொன்னேன். அனாலும் அவரு இங்குட்டும் அங்குட்டுமா போய் வந்துகிட்டுதான் இருந்தாரு. அந்தப்போக்கு எனக்கு சந்தேகமாவே இருந்துச்சு. அதுனால நாங்களும் அவரு பின்னாலயே போய்ட்டு வந்துகிட்டு இருந்தோம். இதுலயே சாயங்காலம் ஆறு மணியாயிருச்சு. இளையாங்குடி பைபாஸ் ரோட்டுல ஒரு இருபத் தேழு பசங்க நின்னுகிட்டுருந்தாங்க. எல்லாரும் சின்னச்சின்னப் பசங்க. அப்ப டிஎஸ்பி இளங்கோ அந்தப் பக்கமா வந்துருக்காரு. அவரப் பாத்ததும் பசங்க சிதறி ஓடியிருக்காங்க. அப்ப ஆனந்த்ங்க்ற பயலோட செருப்பு அறுந்து போயிருச்சு. அதை எடுக்க அவன் குனிஞ் சுருக்கான். அவன் எதையோ எடுக்குறான்னு நெனச்சுக்கிட்ட டிஎஸ்பி அவனைப் பாத்து சுட்டுட்டாரு. அது அவன் கையில பாஞ்சுருச்சு. தகவல் கெடைச்சு நான் ஓடிப்போய் என்ன சார் அப்டி பண்ணீட்டீங்கன்னு கேட்டதுக்கு அவரு வில்லன் மாதிரி சிரிக்கிறாரு. நாங்க ஆளுக திரண்டுட்டோம். அப்ப ஒரு வேன் இங்கன ரொம்ப நேரமா நின்னுக்கிட்டு இருந்துச்சு. அதுக்குள்ளாறருந்து ஏதோ சத்தம். என்னன்னு எட்டிப்பாத்தா குப்பை மாதிரி ஏழெட்டுபேரு ஒண்ணுமேல ஒண்ணாக் கெடக்குறாங்க. கைகாலெல்லாம் ரத்தம். என்னசார் இப்டிப்போட்டு வெச்சுருக்கீங்கன்னு கேட்டதுக்கு அதுக்கும் சிரிச்சாரு. எனக்கு பக்குன்னுருச்சு. ஆஸ்பத் திரிக்கு தூக்கிட்டுப் போவோம் சார்ன்னதுக்கும் சிரிச்சாரு. இந்த ஊர்ல தமுமுக ஆளுங்க கொஞ்சம் ஆக்டிவா இருப்பாங்க. அவங்களுக்கு போன் போட்டேன். அவங்க அம்பது அறுபது பேர் வந்துட்டாங்க. அவங்களும் ஆஸ்பத்திரில சேக்காம இப்டிப்போட்டு வெச்சுருக்கீங் களேன்னு கத்துனதும் எல்லாத்தையும் வெரட்டி அடிச்சுட்டு வேனை கெளம்பிட்டாங்க. அப்ப வேன்ல கெடந்த தீர்ப்புக்கனிங்க்கறவரு செத்துட்டாரு. அடிபட்டு ஆறேழு மணி நேரம் வரைக் கும் எதையும் கண்டுக்காம போட்டு வெச்சுருந்து கொன்னுட்டாங்க. அப்பவே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருந்தா அவரக் காப்பாத்தியிருக்கலாம்" என்றார்.

இமானுவேல் சேகரனுக்குப் பிறகு அந்தப் பகுதியில் செல்லத்துரை எனும் ஆசிரியர் செயல்பட்டு வந்திருக்கிறார். அவரும் முக்குலத்தோரால் படுகொலைக்கு உள்ளாகிறார். அவரது மகன் காமராஜ் என்பவர் சொல்லும் விஷயங்கள் மிக முக்கியமானதாகப்படுகிறது. "தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எங்கப்பா தொடர்ந்து போராடுனார். அவரைக் கொன்னுட்டாங்க. ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்ட எஸ்பியா செந்தில்வேலன் இருக்கும்போது, எங்கப்பா நினைவுநாள் பூஜைக்கு அனுமதி கேட்டேன். 'ஒங்கப்பா நினைவு நாள்ன்னா அத வீட்டுல வெச்சுக் கொண் டாடு'னு சொல்லி என்னைய வெளில அனுப்பிட்டாரு. ஆனா நாங்க அதையும் மீறி நடத்து னோம். இந்தவருஷ இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு போக்குவரத்து ஊழியர் சங்கம் 'தியாகி தெய்வத்திருமகன் இமானுவேல் சேகரன்'ன்னு ஒரு பிளக்ஸ் வெச்சாங்க. உடனே முக்குலத்தோர் போலிஸ்ல ஒரு புகார் கொடுத்து, அதை அகற்றச் சொன்னாங்க. தெய்வத்திரு மகன்ங்க்ற வார்த்தையை எடுத்துட்டுதான் அந்த பிளக்ஸ் அங்கே வைக்க முடிஞ்சது"

இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறை அதிகாரிகளின் அதிகாரச் செயல்பாட்டுக்கு பின்புலமாக இருக்க வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. அதை சம்பவம் நடந்து ஆறு மணி நேரத்துக்குப் பின் காவல் ஆய்வாளர் சிவகுமார் கொடுத்திருக்கும் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப் பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில் காணமுடிகிறது. துப்பாக்கி குண்டுகளுக்கும் குண்டாந்தடிகளுக்கும் பலியான ஆறுபேர் மட்டும் பெயரும் அடையாளமும் தெரிந்த ஆட்களாக இருக்கிறார்கள். வழக்கு பதியப்பட்ட 2000 பேரும் அடையாளம் தெரியாதவர்களாக இருப்பது, புதிர்தான்.

இதைத்தான் இளையாங்குடி சம்பவமும் காட்டுகிறது. நிராயுதபாணியாக நின்றிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து இரண்டு நாட்களுக்குப் பின் சம்பவம் நடந்த இடத்தில், கற்களை யும், செருப்புகளையும் போட்டு சம்பவத்தின்போது அவர்கள் கற்கள் எறிந்ததாகவும் தற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செட்-அப் நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது.
அதுபோல பார்த்திபனூருக்கு அருகிலுள்ள எச்.பரளையிலும் ஆண்கள் யாருமில்லாத நேரத் தில் போலிஸே கலவரக்காரர்கள் வேடமிட்டு கற்களை வீசியும் கம்புகளால் தாக்கியும் மாறி மாறி நடித்து, அதை பதிவு செய்துகொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

பரமக்குடி தாசில்தார் எழுத்து மூல உத்தரவு கொடுத்த பின்பே துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டதாக ஆய்வாளர் சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. தாசில்தார் மணியிடம் அதுபற்றிக் கேட்டால், வாயைத் திறக்க மறுக்கிறார். சம்பவத்தை நடத்தி முடித்துவிட்டு அவரிடம் உத்தரவு வாங்கியதாக அதிகாரத்தரப்பிலிருந்தே தகவல்கள் கசிகின்றன.

அதுபோல இளையாங்குடியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று காவல் துறை தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலர் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அறிக்கை கொடுத்துள்ளார்.

'சாதிகள் இல்லையடி பாப்பா...' என்று சொன்ன பாரதியின் பிறந்த நாளில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது, வெட்கப்பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நாம் மனிதர்கள் என்று நாம் அழைக்கப்படுகிறோம்.

நன்றி : தாமரை, அக்டோபர் 2011.

Saturday, September 17, 2011

நீலகண்ட பறவையைத் தேடி




எஸ்.அர்ஷியா
அவர்தான் மக்ஸிம் கார்க்கியின் அர்தமேனாவ்ஸ் கொடுத்தார். பலபேர் கைமாறி, அதன் கனத்த பவுண்ட் அட்டை சிதிலமாகி யிருந்தது. பழைய புத்தகம். அதன் பக்கங்களைப் புரட்ட, மக்கிய வாசனை வந்தது. அப்போது அது, மக்கிய வாசனையாகத்தான் தெரிந்தது. ஆனால் அது, இதுவரை நான் எழுதிய கதைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர வைத்தது. என்னை வெட்கப்பட வைத்தது. அந்த வெட்கத்தை என் பரிணாம வளர்ச்சி என்றே கருதுகிறேன். நான் மடைமாற்றம் அடைவதற்கு படிக்கட்டாக இருந்த பழைய புத்தகம், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இப்போதும் என்னிடம் பத்திரமாக பைண்ட் செய்யப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்றது.
எப்போதாவது அதன் பக்கங்களைப் புரட்டுவதுண்டு. புரட்டும்போது, அதிலிருந்து மக்கிய வாசனை வருவதில்லை. அதுவேறு வாசனையாக இருக்கிறது. அதை நான் அறிவு வாசனை என்று கருதிக் கொள்கிறேன். புதிய புத்தகங்களுக்கு சுகமான வாசனை இருப்பதுபோல, பழைய புத்தகங்களுக்கு கென்றும் தனியாக ஒரு வாசனை இருக்கிறது. புத்தகத்தை விரும்புபவர்களுக்கு அந்த வாசனை மிகவும் பிடித்திருக்கும்.
மதுரை முனிச்சாலை ரோட்டின் பேறுகால ஆஸ்பத்திரிக்கு எதிரில் அந்த பழைய பேப்பர் கடை இருக்கிறது. முன்புறத்தில் பத்துக்குப் பத்தாகவும் அதையொட்டி உள்ளே அகன்று பரந்த இடமாகவும் அது விரிந்திருக்கும். எங்கள் உறவுக்காரர்களுக்குச் சொந்தமான இடம் அது. அதற்கும் இந்த கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை. பழைய திருநெல்வேலி மாவட்டம் திருந்செந்தூரைத் தாண்டி நவ்வலடி கிராமத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் அதை, அவர்களின் அப்பா துரைராஜ் நாடார் பெயரில் நடத்தி வந்தார்கள்.
அப்போதுதான் நான், குமுதத்தையும் ஆனந்த விகடனையும் இலக்கியம் வளர்க்கும் பத்திரிகைகளாகக் கண்டடைந்திருந்த நேரம். பக்கத்து மிக்சர் கடைக்குப் பொட்டலம் மடித்துத்தர வரும் அவற்றை ஒன்றுவிடாமல் படித்து, என் அறிவு வேட்டையைத் துவங்கியிருந்த நேரமும் அதுதான். நண்பர் கள் 'தட்டேத்தி'விடுவதை உண்மை என்று நம்பியப் பருவமும் அதுதான்!
அப்படி பல 'அதுதான்கள்' என்னை ரசவாதம் செய்து, எனக்குள் இருந்த எதையோ ஒன்றைக் கதைசொல்லியாக உசுப்பியிருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருந்த நான் விழித்துக் கொண்டுவிட்டதாகக் கருதி, ஒரு கதையை எழுதி, அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்தேன். அப்புறம் மரவட்டையாகச் சுருண்டு வழக்கம்போல தினமணி டாக்கீஸில் எம்ஜிஆர் படமும் அலங்கார் தியேட்டரில் சிவாஜி படமுமாகப் பார்க்கப் போய்விட் டேன்.
ஒரு வெள்ளிக்கிழமை மத்தியான வேளையில் தபால்காரர், 'இந்தப் பெயருல யாருருக்கா?' என்று கேட்டு, ஒரு கவரை என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார். அதை அவசர அவசரமாகப் பிரித்துப் பார்த்தால், நான் எழுதியனுப்பியிருந்தக் கதை. ஆனந்த விகடனின் ஐம்பத்திரண்டாம் பக்கத்தில் அச்சாகியிருந்தது. 5 பக்கங்கள். ஜெயராஜ் படம் போட்டிருந்தார். என் பெயர் அழகாக(?) அச்சிடப்பட்டு, அடிக்கோடு இடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த நொடியிலிருந்து என் கால்கள் பூமிக்கு மேலே இரண்டு அங்குல உயரத்தில் இருந்தன. தரையில் கால்கள் பாவவே இல்லை. தலையில் கொம்பு முளைத்திருப்பதுபோல எதுவோ தட்டுப்பட்டது. 'என் இனிய தமிழ் மக்களே' என்ற கரகரத்தக் குரல் எனக்குள்ளிருந்து எனக்கே கேட்டது. தலையைச் சிலிர்த்துக் கொண்டபோது,'ஈ பாலக்காட்டு மாதவன் யாரையும் நம்பி இல்லா' என்ற பிசுறும் குரலும் கேட்டது. 'fileக்கும் lifeக்கும் நாலெழுத்துதான். எழுத்து மாறுச்சுன்னா எல்லாமே மாறிரும்' என்று பட்டையாய்க் கண்ணாடிபோட்ட பாலசந்தரும் தத்துவம் பேசினார்.
நெசம்மா சொல்றேன். அப்படித்தான் வாசகர்களின் கெட்டநேரமும் எனது நல்லநேரமும் ஒன்றுகூடி வந்தது. அப்படி வரும் என்று நான் நினைத்திருக் கவேயில்லை. பிளஸ் இண்டு பிளஸ்ஸோ, மைனஸ் இண்டு மைனஸ்ஸோ சேர்ந்துதான், பிளஸ் ஆகும் என்று படித்திருக்கிறேன். ஆனால் இங்கு பிளஸ் இண்டு மைனஸ் சேர்ந்து பிளஸ் ஆகியிருந்தது.
என் அண்ணனுக்கு ஒரு சைக்கிள் கடை இருந்தது. வாடகை மற்றும் ரிப்பேர் நிலையம். லூனா சைக்கிள்ஸ் என்று பெயர். அண்ணன் காங்கிரஸ்காரர். இளைஞர் காங்கிரஸ் பொறுப்பிலிருந்தார். அந்தக் கடைக்கு திமுகாக்காரர்களும் வருவார்கள். அதிமுகாக்காரர்களும் வருவார்கள். அதில் பாதிப்பேர் வாத்தியார்கள். சிலபேர் யுனிவர்சிட்டி வாத்தியார்கள். காலையிலும் சாயங்காலமும் கடையில் ஆட்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். அரசியலும் சினிமாவும் பேசுவார்கள். அதைத்தாண்டி மூணு வட்டிக்குக் கொடுத்தக் கணக்கைப் பார்ப்பார்கள். அப்புறம் யார் யாருடன் (ஓடிப்)போனார்கள் என்ற கதை பேசுவார்கள். ஒருபோதும் அந்த வாத்தியார்கள் பாடத்தைப் பற்றியோ... படிப்பைப் பற்றியோ பேசி நான் கேட்டதே இல்லை.
ஆனால், அவர்கள் எல்லோரும் என் முதல் கதையைப் படித்துவிட்டு, 'அப்டியாக்கும்... இப்டியாக்கும்' என்று புகழ்ந்து பேசினார்கள். சும்மாவே புகழ்ச்சி என்றால் நமக்கு ரொம்பப் புடிக்கும். அதிலும் நம்மைவிட அதிகம் படித்தவர்கள் புகழுகிறார்கள் என்றால், சும்மாவா? அதற்குள்ளே இருக்கின்ற சூச்சுமம் தெரியாமல் மதிமயங்கிப் போய்விட்டேன். 'அடுத்தக் கதை எழுதலையா... எழுதலையா?' என்று வேறு வேலையே அவர்களுக்கு இல்லாத மாதிரிக் கேட்டு என்னை 'நச்'செடுத்துவிட்டார்கள். 'அடுத்தக் கதை எழுதினால்தான் விடுவேன்' என்பது மாதிரி அவர்கள் பேச்சு இருந்தது. எதைப் பற்றி எழுதுவது?
அப்போதுதான் இங்கர்சால் வாத்தியார் சொன்னார். வெள்ளாளப்பட்டி அரசு ஆரம்பப் பாடசாலையில் வாத்தியார், அவர். 'நெறைய படிடா. அப்பத்தான் எழுதுற உத்தி வரும்!' என்று. அவர் எம்ஜிஆர் ரசிகர். ரசிகரென்றால் தீவிர ரசிகர். இப்போதிருக்கும் சூப்பர் ஸ்டார், தல, தளபதி ரசிகர்கள் மாதிரியெல் லாம் இல்லை. அவர் வேற மாதிரி. முதல்நாள் முதல் காட்சியில் படம் பார்த்து விடுவார். அந்தப் படத்தில் எம்ஜிஆர் போட்டுக்கொண்டு வரும் டிரஸ் மாடலை அன்றைக்கு சாயந்திரமே தைத்துப் போட்டுக்கொண்டு வந்துவிடுவார். எம்பிராய்டரி பூப்போட்ட சட்டைகள் அவருக்கு இஷ்டமானவை. வெள்ளைச் சட்டைக்கு கருப்புநிற பட்டன்தான் சரியானது என்பதிலிருந்து அவர் ரசனை புரிபடும் என்று நினைக்கிறேன். வாழ்க்கையில் அவர் சொன்ன ஒரே சரியான யோசனை, 'நெறைய படிடா. அப்பத்தான் எழுதுற உத்தி வரும்!' என்பதாகத்தான் இருக்க முடியும்.
அந்த நேரத்தில் தமிழில் வெளிவந்த அத்தனைப் பத்திரிகைகளிலும் துணுக்குச் செய்திகளையும் வாசகர் கடிதங்களையும் திசை.முத்து என்பவர் எழுதி வந்தார். அவர் பெயரை முன்னமே பார்த்திருக்கிறேன். அவர் என் சிறுகதை பிரசுரமான அடுத்த வாரத்தில், அத2கு ஒரு வாசகர் கடிதம் எழுதியிருக்கிறார். அதை நான் பார்க்கவில்லை. ஆனால் அந்தக்கடிதம் எனக்கு ஆனந்த விகடனிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அதிலிருந்த விலாசத்தைப் பார்த் தால், பக்கத்து ஏரியா ஆசாமி!
ஓடோடிப்போய் அவரிடம் நட்பு வளர்த்தேன். 'வாங்க எழுத்தாளரே!' என்று, அவர் தன் பங்குக்கு பட்டையைக் கட்டினார். சந்தோஷமாகத்தான் இருந் தது. நட்பு இறுகஇறுக அவர், 'துணுக்குச் செய்திகளுக்கு ஆதாரமாக இருக்கும் இடத்துக்குப் போவோம் வா' என்று, ஒருநாள் அழைத்துப் போனார். போன இடம், நவ்வலடி சகோதரர்கள் நடத்திவந்த அதே பழைய பேப்பர்கடை!
அந்த பழைய பேப்பர் கடை மதுரையிலேயே சற்று பெரியது. சுற்று வட்டாரத்தில் பழைய பேப்பர் வாங்கும் தலைச்சுமை வியாபாரிகள், நடை வியாபாரிகள், சைக்கிள் வியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் எல்லோருமே அங்கேதான் கொண்டு வந்து போடுவார்கள். காகிதங்களில் இன்ன காகிதம் என்றில்லாமல் எல்லா வகையையும் அங்கே பார்த்திருக்கிறேன். யுனெஸ்கோ கூரியரை அங்கேதான்... பழைய புத்தகமாகத்தான் முதல்முறையாகப் பார்த்தேன். அதற்குமுன் அதுபற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. கணையாழியை கண்டடைந் ததும் அங்கேதான். மணிக்கொடி, வானம்பாடி எல்லாமே யாரோ படித்துவிட்டு எடைக்குப் போட்ட பழைய புத்தகமாகத்தான் எனக்கு அறிமுகமானவை.
அங்கு வரும் ஆங்கிலப் புத்தகங்களைப் பொறுக்கியெடுத்து, அதிலுள்ள படங்களைப் பார்த்து, படத்துக்கு ஏற்ப தங்கள் அறிவுக்குப்பட்ட தமிழில் துணுக்குகள் ஆக்குவதற்கான கோடவுனாகவும் அந்த பழைய பேப்பர்கடை இருந்து வந்தது. அங்கு, எனக்கு முன்பே வந்து சேர்ந்தவர்களாக துணுக்குத் திலகம் ஜெகவை பால்ராஜ், சு.த.குருசாமி, 'ஓ' பத்திரிகை கிருஷ்ணன் போன்ற வர்கள் இருந்தார்கள். நவ்வலடி சகோதரர்களுக்கு இதுபோன்ற படைப் பாளர்கள் தங்கள் கடைக்கு வந்துபோவது பெருமைக்குரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். கடையில் வேலை நடந்து கொண்டிருக்கும்போது போனாலும் கூட, நவ்வலடி சகோதரர்கள் முகம் சுளித்தில்லை. மாறாக 'வாங்க!' என்று வரவேற்பார்கள்.
ரீகல் டாக்கீஸ் வாசலிலும் டவுன் ஹால் ரோடு கடைகள் முன்பாகவும் பழைய புத்தகக் கடை விரிக்கும் நண்பர்கள் அவசர அவசரமாக அங்கிருக்கும் புத்தகங் களைப் பிரித்தெடுப்பார்கள். மலைபோல் குவிந்துகிடக்கும் காகிதக் குவியலுக் குள்ளிருந்து முத்தும் பவளமுமாக அவர்கள் கண்டெடுப்பார்கள். பள்ளிப் பாடப் புத்தகங்கள், கல்லூரிப் பாடப் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், சிறுவர் கதைகள், இலக்கியப் புத்தகங்கள் என்று அள்ளிக்கொண்டுப் போவார்கள்.
ரசனை மிகுந்த ஒரு மனிதன் அதை வாசித்துவிட்டு, மனதுக்குள் அதன் சாரத்தைச் சேமித்துக் கொண்டு, காகிதங்களைத்தான் அவன் பழையதாக எண்ணிப்போட்டு விடுகிறான். அந்த காகிதங்கள் அடுத்தவனின் ரசனைக்குத் தீனியாவதாக எனக்குத் தோன்றுவதுண்டு. புத்தகங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவை புரிந்துகொள்ளவே முடியாது என்றும் கருதுகிறேன்.
நவ்வலடி சகோதரர்களில் மூத்தவர் சபாபதி. ப.நெடுமாறன் கட்சியில் செயலாளராக இருந்தார். நடுவிலுள்ள ராமச்சந்திரன், அரசு அலுவலங்களில் ஏலம் எடுக்கப் போய் வருவார். கடைசி சகோதரரான முத்துராமன் பெரும்பாலும் கடையிலிருப்பான். முத்துராமன்தான் என் தேடலுக்கு உறுதுணையாக இருந்த வன். ஏலத்தில் எடுத்துக்கொண்டு வரும் பழையதில் நல்ல வெள்ளைக் காகிதங் கள், நல்ல நிலையிலுள்ள கவர்கள், முத்திரையிடப்படாத தபால் தலைகள் எல்லாமே இருக்கும். அதை தனியே பிரித்தெடுக்கும்போது, வெள்ளைக் காகிதங் களையும், கவர்களையும், தபால் தலைகளையும் முத்துராமன் எனக்குக் கொடுப் பான். ''எழுதியனுப்ப யூஸ் ஆகும்ல்ல!" என்று.
முதல்கட்டமாக எனக்கு பழைய புத்தகங்கள் மூலம் அறிமுகமானவர்கள் ராஜேஷ்குமாரும், பாலகுமாரனும்தான். அந்தப் புத்தகங்களாக எடுத்துத் தந்தான். அந்தப் புத்தகங்கள்தான் அதிகமாக பழைய பேப்பர் கடைக்கு வரும். பழைய பேப்பர் கடைக்கு அதிக வரவாக எது இருக்கிறதோ, அது அதிகமாக விற்பனை யாகிறது என்று பொருள் என்று முத்துராமன் சொல்வான். அவன் அவ்வளவாகப் படித்தவனில்லை. அதையேதான் தினத்தந்தி அதிபர் சி.பா. ஆதித்தனாரும் சொல்லியிருக்கிறார். அந்தக் கோட்பாட்டை அங்கே பொறுக்கியெடுத்த ஒரு பழைய புத்தகத்தில்தான் படித்தேன்.
கொஞ்ச நாட்களிலேயே ராஜேஷ்குமாரின் நடையும் பாலகுமாரனின் தன் முனைப்பும் எனக்கு சலிப்பைத் தந்துவிட்டது. சுஜாதா என் ஆட்சிக்குள் வந்தார். கொஞ்ச நாட்கள்தான். அவரும் 'போய்ட்டு வாரேன்' என்று என்னிடமிருந்து விலகிவிட்டார். இதற்குள் குங்குமத்திலும், குமுதத்திலும், கல்கியிலும் எனது கதைகள் வந்திருந்தன.
ஒன்றுபட்ட இராமநாதபுர மாவட்டத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக இருந்த தோழர் எஸ்.ஏ.பெருமாளை, சிவகாசியையடுத்த மீனம்பட்டியில் பட் டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்தின் மீட்புப் பணியின்போது சந்தித்தேன். முதல் சந்திப்பு அது. அன்றிரவு, அந்த நெடிய உருவத்துடன் குட்டி முயல் போல பேசிக்கொண்டே நடந்தபோது, அந்த வாரம் என் சிறுகதை வெளியாகியிருந்த கல்கியை அவரிடம் தந்தேன். வாங்கி வைத்துக் கொண்டார்.
அதன்பின் நான் அவரை சந்தித்தபோது, ஏழெட்டு ஆண்டுகள் போயிருந்தன. பல்வேறு பத்திரிகைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட எனது சிறுகதைகள் வந்திருந்தன. அப்போது அவர் மதுரை தீக்கதிர் அலுவலக வளாகத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருந்தார். சிவகாசி சந்திப்பின்போது நான் கொடுத்துவிட்டு வந்திருந்த சிறுகதையை நினைவு கூர்ந்தார். "ரொம்ப நல்ல கதை அர்ஷியா. நல்லா வந்துருச்சு!" என்று ஒரு சகாவைப்போல உரையாடினார். உரையாடல் எனக்கு சமதையாக இருந்தது. தன்னை அவர் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ளவில்லை. தன்னை, என் தரத்துக்கு கீழிறக்கிக் கொண்டு பேசினார். "நெறைய எழுதணும், அர்ஷியா!" என்று வாழ்த்தினார். டீ வாங்கிக் கொடுத்து உபசரித்தவர், இப்போது மெல்லியக் குரலுக்கு மாறியிருந்தார். அது ஒரு ரகசியம்போல... மந்திரம்போல... இருந்தது. காதலியிடம் சிலாகித்துப் பேசும் தன்மை அதற்குள்ளிருந்தது. "இப்ப நீ எழுதிருக்கியே கதை, இந்த மாதிரி எழுதுறதுக்கு ரொம்பப் பேரு இருக்காங்க. நாம இந்த மாதிரியெல்லாம் எழுத வேண்டியதில்ல. அது மத்தவங்க வேலை. நாம மக்களப் பத்தி எழுதணும். அவங்க பாடு பத்தி எழுதணும். அதுதான் நம்ம வேலை. அப்டி எழுத எவ்வளவோ இருக்கு. ஒனக்கு நல்லா எழுத வருது. எழுது. இன்னும் நல்லா வரும்!" என்றார்.
அவர்தான் மக்ஸிம் கார்க்கியின் அர்தமேனாவ்ஸ் கொடுத்தார். பலபேர் கைமாறி, அதன் கனத்த பவுண்ட் அட்டை சிதிலமாகியிருந்தது. பழைய புத்த கம். அதன் பக்கங்களைப் புரட்ட, மக்கிய வாசனை வந்தது. அப்போது அது, மக்கிய வாசனையாகத்தான் தெரிந்தது. ஆனால் அது, இதுவரை நான் எழுதிய கதைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர வைத்தது. என்னை வெட்கப்பட வைத்தது. அந்த வெட்கத்தை என் பரிணாம வளர்ச்சி என்றே கருதுகிறேன். நான் மடைமாற்றம் அடைவதற்கு படிக்கட்டாக இருந்த பழைய புத்தகம், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இப்போதும் என்னிடம் பத்திரமாக பைண்ட் செய்யப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்றது.
எப்போதாவது அதன் பக்கங்களைப் புரட்டுவதுண்டு. புரட்டும்போது, அதிலிருந்து மக்கிய வாசனை வருவதில்லை. அதுவேறு வாசனையாக இருக்கிறது. அதை நான் அறிவு வாசனை என்று கருதிக் கொள்கிறேன். புதிய புத்தகங்களுக்கு சுகமான வாசனை இருப்பதுபோல, பழைய புத்தகங்களுக்கு கென்றும் தனியாக ஒரு வாசனை இருக்கிறது. புத்தகத்தை விரும்புபவர்களுக்கு அந்த வாசனை மிகவும் பிடித்திருக்கும். புத்தகம் எத்தனைக் கெத்தனை பழையதோ, அத்தனைக்கத்தனை அதன் வாசம் அதிகமாக இருக்கும். அதன் வயதை கார்பன் டேட்டிங் மூலம் கண்டு பிடிக்க வேண்டி யதில்லை. அதன் இம்பிரிண்டிலேயே குறிப்பிட்டிருப்பார்கள். ஒருவேளை இம்பிரிண்ட் இல்லாமலோ, கிழிந்தோ போயிருந்தால் கார்பன் டேட்டிங்குக்குப் போகலாம்.
பைன் மரத்தில் செய்யப்பட்ட காகிதத்தில், அதிலுள்ள ரோசின் என்ற பொருள் மூலம் சுகமான அடர் வாசனை வரும். கிட்டத்தட்ட 100 வகையான வாசனைப் பொருட்கள் காகிதத்துக்குள் ஒளிந்திருக்கிறது.
இப்போது எனக்கு இரண்டு நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளிவந்திருக்கிறது. அடுத்த நாவலான 'அப்பாஸ்பாய் தோப்பு' அச்சுக்குப் போயிருக்கிறது. முதல் நாவல் ஏழரைப்பங்காளி வகையறா தமிழக அரசின சிறந்த நாவலுக்கானப் பரிசையும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த நாவலுக்கானப் பரிசையும் பெற்றிருக்கிறது.
ஒன்று வெளியானதும், எழுத்தில் எனக்கு முன்னே பயணித்துக் கொண்டிருக்கும் முன்னோடிகள், 'அர்ஷியா, அதைப் படிச்சியா?... இதைப் படிச்சியா?' என்று கேட்பது வழக்கத்தில் இருக்கிறது. அந்த வகையில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் பா. ஆனந்தகுமார், மேலைச்சிவபுரி ஸ்ரீகணேசர் செந்தமிழ் கல்லூரியின் நூலகர் முனைவர் ந.முருகேசபாண்டியன், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜர் கல்லூரியின் பேராசிரியர் சு,வேணுகோபால் ஆகியோர் முக்கியமானவர்கள். பார்க்கும்போதெல்லாம் எதையாவது சொல்லி விட்டுப் போய்விடுவார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதும் வழக்கமான பழைய புத்தகத் தேடலுடன் அவர்கள் சொல்லும் புத்தகத்தைத் தேடி ஓடுவதையும் வழக்கத்தில் வைத்திருக்கிறேன்.
கடைசியாக, சு.வேணுகோபாலை சந்தித்தபோது, "அர்ஷியா, ஒன்னோட கபரஸ்தான் கதவு சிறுகதை படிச்சேன். கட்டுக்கோப்பா நல்லா வந்துருக்கு. சிறுகதைன்னா, இப்டித்தான் இருக்கணும். தமிழின் சிறந்த சிறுகதைகள்ன்னு ஒரு தொகுப்பு தயாராகிட்டுருக்கு. காவ்யா போடுது. அந்தத் தொகுப் புல இந்தச் சிறுகதையை சேத்துருக்கேன்!" என்று சொன்னார். அத்தோடு நிறுத்திவிட்டிருக்கலாம். நிறுத்தாமல், "அடுத்து நீ படிக்க வேண்டிய முக்கியமான ஒண்ணு இருக்கு. நீலகண்ட பறவை. ரொம்ப முக்கியமான நாவல். கிடைச்சுச்சுன்னா படி. படிச்சுட்டு எனக்குக் குடு!" என்றார்.
நீலகண்ட பறவையை கடந்த ஒன்னரை ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். பழைய புத்தகக்கடைகளில் மட்டுமல்ல. புதிய புத்தகக் கடை களிலும் கூட. அது எங்கும் கிடைப்பதாகக் காணவில்லை. தமிழ்நாட்டிலுள்ள அத்தனைப் புத்தகக் கடைகளையும் அலசியாகிவிட்டது. நண்பர்களும் நிறையவே தேடினார்கள். கடைசியாக ஒருநண்பர், 'அது என்.பி.டி.,யில் கிடைக்கும்' என்றார். அங்கும் போனேன். போனார்கள். புத்தகம் கிடைக்கவில்லை. மேலும் கீழுமாகப் பார்த்தார்கள். பதிப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். கூடவே அங்கிருந்த ஒருவர்,"பரிசல் செந்தில்ட்ட கேளுங்க. அவர்ட்டருக்கு" என்றார்.
பரிசல் செந்தில் நம்பரைத் தேடுவது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. தொடர்பு எல்லைக்குள் வந்துவிட்டார். நீலகண்ட பறவையை அவரிடம் கேட்டபோது, "என்ட்ட ஒரு காப்பி இருக்கு, அர்ஷியா. இப்ப வீடு மாத்திக்கிட்டு இருக்கேன். புது வீட்டுக்குப் போனதும் ஜெராக்ஸ் போட்டு அனுப்பி வைக்கிறேன்!" என்றார். நம்பிக்கையாக இருந்தது. எப்படியும் கிடைத்துவிடும். படித்துவிடலாம்.
இரண்டு மாதம் கழித்து தொடர்பு கொண்டு கேட்டபோது, பாவமானக் குரலில் சொன்னார். "அர்ஷியா, என்ட்ட இருந்துச்சு அர்ஷியா. வீடு ஷிப்ட் பண்றப்போ எப்டியோ மிஸ்ஸாயிருச்சு!"
ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை. எல்லா பழைய புத்தகக் கடையிலும் சொல்லி வைத்திருக்கிறேன். என் அழைப்பு எண்ணையும் கொடுத்து வைத்திருக்கிறேன்.
ஒவ்வொரு அழைப்பையும் நீலகண்ட பறவையின் அழைப்பாகக் கருதியே எடுக்கிறேன்.

நன்றி: உங்கள் நுாலகம். செப்டம்பர் 2011