Tuesday, September 6, 2011

பள்ளத்தாக்கின் அரசியல்!



எஸ். அர்ஷியா

பிரச்சனைகளை சரிவரக் கையாளத்தெரிந்தவர், தான் குலாம் நபி ஆசாத். ஆனால், ஆனைக்கும் அடி சறுக்குமே... அப்படித்தான் ஆகிப்போனது!

அவரது அமைச்சரவையால் போடப்பட்ட யதார்த்தமான ஒரு உத்தரவும், அதைத்தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகளால் அந்த உத்தரவைத் திரும்பப் பெறுவதற்காகப் போடப்பட்ட மறு உத்தரவும், ஆசை ஆசையாய் அவர் வாங்கிக்கொண்டு போய் உட்கார்ந்த முதல் அமைச்சர் பதவியை, ராஜினாமா செய்யும் அளவுக்குக் கொண்டு போய் விட்டது! (ஜுலை 7, 2008)
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிக் குதிரைகளின், எட்டுத்திசைகளிலும் உயிர்க்கும் லகானை, ஒருசேரப்பிடித்து, பிரதமர் மன்மோகன் சிங்கின் கையில் லாவகமாகக் கொடுத்துக் கொண்டிருந்த அவருக்கு, மாநில முதலமைச்சராகும் வாய்ப்பு வலியக் கிடைத்ததும், நாடாளுமன்றத் துறையிலிருந்து விலகி, தினம் ஒருசர்ச்சை, நாலைந்து இடங்களில் குண்டுவெடிப்பு, பயங்கரவாதிகளின் ஊடுருவல், நாள்தோறும் துப்பாக்கிச் சூடு, எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று அனைத்துவகைகளிலும் அல்லோகல்லோப்படும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்புக்குப் போனார்,அவர்!
அம்மாநிலத்தின்நெடியமலைத் தொடர்களின் இடையே 13 ஆயிரம் அடி உயரத்தில், ஸ்ரீ அமர்நாத் கோவில் உள்ளது. அங்குள்ள குகைக் கோவில் ஒன்றில், ஜுலை - ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதிலிருந்து பக்தர்கள் வருவது வாடிக்கை!
பாரதீய ஜனதா கட்சியும், அதன் குடுமியைக் கையில் பிடித்திருக்கும் ஆர்.எஸ்.எஸும், துணைக் கோள்களான இன்னபிற காவி அமைப்புகளும், தங்களது இந்துத்துவா ஊதுகுழலை எடுத்து, தேசம் முழுவதும் ஊதுவதாலும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வரும் இதுபோன்ற கோவில்களின் ஆன்மிகச் சாகசம் மற்றும் அருள்பாலிப்பு நிறைந்த விளம்பரங்கள், சாதாரணமாக இருந்த இந்துக்களில் பலரை தீவிர பக்தர்களாக ஆக்கியிருக்கிறது. அந்த வகையில், பனிலிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை, கடந்த சிலவருடங்களாக அதிகரித்து வருகிறது.
இந்த மாநிலத்தின் ஆளுநர் யாரோ... அவரே இந்தக் கோவில் வாரியத்துக்கான தலைவரும் ஆவார். அதனடிப்படையில், கடந்த மே மாதம் ஆளுநராக இருந்த எஸ். கே, சின்கா, அதிக எண்ணிக்கையில் வரும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்கும் கோவில் நிர்வாகத்திற்கு இடம் ஒதுக்கவேண்டும் என மாநில அரசைக் கேட்டுக்கொண்டார்.
ஆளுநரின் இந்தக் கோரிக்கை, மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்து. அம்மாதம் 26 - ம் தேதியே அனந்தநாக் மாவட்டத்தில் பால்டால் எனுமிடத்தில் வனத்துறைக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை, கோவில் நிர்வாகம் அனுபவித்துக் கொள்ளலாம் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தவைப் பிறப்பித்தது, கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவரும், வனத்துறை அமைச்சராகிய குவாசி முகம்மது அப்சல்!

நிலம் வழங்கப்பட்ட விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்ததும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்கிவரும் தன்னாட்சிக்(பிரிவினைவாத?)கோரும் அமைப்புகளான ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி, ஜீலானி மற்றும் மீர்வெய்ஜ் உமர் பாரூக் தலைமையிலான ஹூரியத் மாநாட்டுக் கட்சிகள், கோவிலுக்கு அரசு நிலத்தை ஒதுக்கியதை திரும்பப் பெறவேண்டும் என்ற பேராட்டத்தில் ஈடுபட்டன. 'நிலம் வழங்கப்பட்டதை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைக் குழு' எனும் பெயரில் அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது. 'ஸ்ரீநகர் சலோ' என்ற கோஷம், தன்னாட்சி அமைப்புகள் ஆழமாக வேறூன்றியிருக்கும் ஜம்முவில் பெரிதாய் கேட்கத் துவங்கியது.

நிலத்தை திரும்பப் பெறக்கோரி துவக்கப்பட்ட இந்தப் போராட்டம் நாளடைவில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிலிருந்து துண்டாட வேண்டும் எனும் கிளர்ச்சியை நோக்கிப் போனது. துண்டாடல் கிளர்ச்சி கோஷம் முன்னெழுந்ததும், நிலத்தை ஒதுக்கக் கையெழுத்திட்ட வனத்துறை அமைச்சரின் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி சந்தடிசாக்கில், 'கோவிலுக்கு நிலத்தை ஒதுக்கியதை ரத்துசெய்ய வேண்டும் என்றும்... இல்லாவிட்டால்... கூட்டணி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக'வும் உள்குத்து அறிவிப்பை வெளியிட்டது. எதிர்பாராத இந்த மிரட்டலையடுத்து, காங்கிரஸ் கட்சி இக்கட்டில் மாட்டிக்கொள்ள, வேறு திசையில் தனது பயணத்தை துவங்கிவிட்டது, மக்கள் ஜனநாயகக் கட்சி!

இந்நிலையில், ஜூன் 25 - ம் தேதி அம்மாநில ஆளுநரான எஸ்.கே.சின்கா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவரது இடத்துக்கு, அதுவரை அங்கே மத்திய அரசின் பிரதிநியாகச் செயல்பட்டுவந்த என்.என். வோரா அமர்த்தப்பட்டார்.
போராட்டத்தின் நீட்சியும் அதையடுத்து எழுந்த கோரிக்கைகளும் மாநிலம் முழுவதும் எழுந்துவிட்ட வன்முறை அலையும் உடனடி சுமுக நடவடிக் கைகளுக்கான அவசியத்தை உருவாக்கியிருந்தன. அதைக்கருத்தில் கொண்டு மாநில முதல்வர் குலாம்நபி ஆசாத், ஆளுநர் என்.என்.வோராவை இரண்டு நாட்கள் தொடர்ந்து சந்தித்தார். இது, சிதறப்போகும் கூட்டணியைக் காப்பாற்றி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்க, புது ஆளுநரான என்.என். வோரா, புதிய முயற்சிகளை மேற்கொள்ள வகைசெய்தது.

இதனிடையே, ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தைத் திரும்பப் பெறக்கூறி, ஆறாவது நாள் போராட்டத்தை ஜூன் 28 - ம் தேதி ஸ்ரீநகரில் நடத்தினார். அந்தப் போராட்டத்தைத் தடுத்த போலிஸ், அதில் கலந்து கொண்டவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் சிக்கியவர்களை வளைத்தும் வதைத்தும் கலைக்க... போராட்டம் கலவரத்தை நோக்கிப் போக ஆரம்பித்தது.

கலவரத்தின் வீச்சு, அறிவிக்கப்படாமலேயே ஊரடங்குபோல ஆக்கிவிட்டது. சில இடங்களில் போலிஸ்காரர்கள் ஊர்வலத்தில் வந்தவர்களிடம் சிக்கிக் கொள்ள, ஊர்வலத்தினர் கலகக்காரர்களாகிப் போனார்கள். ரத்தம் ஒழுக ஒழுக போலிஸ்காரர்கள் அவர்களிடம் உதைபட்டார்கள். கும்பலிடம் சிக்கி உயிருக்குப் போராடிய போலிஸ்காரர் ஒருவரை, யாசின் மாலிக்கே ஓடிவந்து காப்பாற்ற வேண்டிய அளவுக்கு ஆகிப்போனது. இதையடுத்து, துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தின் போது, 50 க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

அதில் படுகாயமடைந்த இம்தியாஸ் அஹமத் ஹாரூன் எனும் அப்பாவி நபர், அன்று மாலை இறந்துபோக, அந்த மருத்துவமனையை நோக்கி, திடீர் ஊர்வலங்கள் கிளம்பின. மறுநாள் ஞாயிறு மதியம் வரை, ஸ்ரீநகர் முழுவதும் பதட்டம் நிறையவே இருந்தது. அன்றே ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் மீர்வெய்ஜ் பிரிவு 'ஸ்ரீநகர் சலோ'வாகப் புறப்பட... பதட்டத்தின் மடங்கு பன்மடங்காக அதிகரித்தது.
சம்பவங்களை ஓநாயின் குயுக்தியுடனும் நரியின் தந்திரத்துடனும் கவனித்து வந்த பாரதீய ஜனதா கட்சி, கட்சியின் துணைத் தலைவரும் இஸ்லாமியருமான முக்தார் அப்பாஸ் நக்வியை வைத்தே 'பிரிவினைவாதிகள் மற்றும் தேசிய எதிர்ப்பாளர்களிடமிருந்து நாட்டின் இறையாண்மையைக் காக்கவும், ஸ்ரீஅமர்நாத் கோவில் வாரியம் தன்னாட்சியுடன் செயல்படவும் மத்தியஅரசு போதுமான ராணுவத்தை ஜம்மு - காஷ்மீருக்கு அனுப்பி வைக்க வேண் டும்' என அறிக்கை விட வைத்தது.

ஏற்கனவே இருந்த பதற்றத்துடன் புதிதாய் இதுவும் சேர்ந்து கொள்ள, இந்தப் பதட்டத்தைத் தணிக்க, ஆளுநர் என்.என். வோரா புதிய யுக்தியைக் கையாள்வதாகக் நினைத்து... அதாவது, 'பனி லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, அனைத்து விதமான பாதுகாப்பையும் வசதிகளையும் மாநில அரசே செய்து கொடுத்து விடுவதாக ஒப்புக்கொண்டுள்ளதால், கோவில் நிர்வாகத்திற்கு இடம் தேவையில்லை' என்று ஒருகடிதத்தை, முதல்வர் குலாம் நபி ஆசாத்துக்கு அனுப்பி வைத்தார்.

ஆட்சியைக் காப்பாற்ற, பேசிவைத்துக் கொண்டதுபோல நடத்தப்பட்ட இந்த நாடகத்தில், 'கோவில் வாரியத் தலைவரே இடம் வேண்டாம்' என்று சொல் லிவிட்டார் எனும் அடிப்படையில், ஒதுக்கப்பட்ட இடத்துக்கான உத்தரவை, மாநில அரசு ரத்து செய்துவிட்டது.

இதனிடையே கூட்டணி அரசுக்கு மக்கள் ஜனநாயகக் கட்சி, தந்து வந்த ஆதரவை முற்றிலும் விலக்கிக்கொண்டது. இதைத்தொடாந்து ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் குலாம் நபி ஆசாத்தை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தச்சொல்லி ஜூலை 7 - ம் தேதியைக் குறித்துக் கெடு கொடுத்தது தான், நிஜமான அரசியல் திருப்பம்!

நிலத்தைத் திரும்பப் பெறக்கோரி துவக்கப்பட்ட போராட்டமும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிலிருந்து துண்டாட வேண்டும் என்று எழுந்த கிளர்ச்சியும் கட்டுக்குள் வந்துவிட்டது என ஆளும்வர்க்கம் ஆசுவாசத்தில் திளைக்க... ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் வித்தை தெரிந்த மதவாத அமைப்புகளுக்கு இது, வலியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போலாகி விட்டது. இப்போது, மதவாத இந்துத்துவா அமைப்புகளின் முறை!
கோவில் வாரியத்துக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கான உத்தரவை ரத்து செய்ததைக் கண்டித்து, நாடு தழுவிய போராட்டத்துக்கு பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட மதச்சார்பு அமைப்புகளும் அதன் துணைக்கோள்களும் அறிவிப்பு செய்துவிட்டன. ஒரு சம்பவத்துக்கான இரண்டாம் கட்டப் போராட்டமாக, 'ஜம்மு - காஷ்மீரை குஜராத் ஆக்கிவிடலாம்' எனும் நினைப்புடன் நாக்கில் எச்சில் நீர் ஒழுக விடுக்கப்பட்டக் காவி அழைப்பில், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவே செய்தது.

ஜூலை 3. வியாழனன்று நடந்த மதவாத அமைப்புகளின் பந்தின்போது, ஜம்முவில் அறுபத்தைந்து பேர் காயமடைந்தனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடங்களில், வன்முறையாளர்கள் நடத்திய கல்வீச்சில் பல போலிஸ்காரர்களுக்கும் காயம். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நுழைவாயில் என்றழைக்கப்படும் காதுவா மாவட்டத்தில், கலவரத்தின் நிலை உச்சமாகவே இருந்தது. கலவரக்காரர்கள் அரசு அலுவலகங்கள், அரசு வாகனங்கள் என்று தேடித்தேடித் தீ வைத்துக் கொளுத்தினார்கள். எல்லைப் புறத்திலுள்ள பஞ்சாப் - மதுப்பூர் பகுதியில் சுங்கச்சாவடி, போலிஸ் புறக்காவல் நிலை யம் வன்முறையாளர்களின் தீக்கு இரையானது. ஜம்மு - காஷ்மீர் தரைவழிப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முற்றிலுமாய்த் துண்டிக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலிஸ்காரர் ஒருவரை செருப்பைக் காட்டி மிரட்டிய சம்பவமும் நடக் கவே செய்தது.

காவி அழைப்பின் நீட்சி, மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உயிர்ப் பலியாக வடிவெடுத்தது. அங்கே நான்கு உயிர்கள் பலியானதைப் பற்றிக் கவலைப்படாத பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கார், 'ஜம்மு - காஷ்மீரின் பெரும்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துவிட்டது. சீனா ஒரு பகுதியை விழுங்கிவிட்டது. இந்நிலையில் கோவிலுக்கு நூறு ஏக்கர் நிலம் கொடுப்பதில் என்ன பிரச்சனை?' என்று எரியும் பிரச்சினையில் எண்ணெய் ஊற்றித் தூண்டிவிட்டார்.
அக்கட்சியின் மத்திய அலுவலக வாசலில், '100 ஏக்கர் நிலத்தை 100 கோடி இந்துக்களான நாங்கள் பிச்சையாகக் கேட்கவில்லை. சிவ பக்தர்கள் அவமதிக்கப்படுவதை பாரதீய ஜனதா கட்சி பொறுத்துக் கொள்ளாது' என்று ராமரிலிருந்து சிவனுக்குத் தாவி, வன்முறைக்கு உரம்சேர்க்கும் விதமாக எழுதி வைக்கப்பட்டிருந்தது.

பல மாநிலங்களில் கண்டுகொள்ளப்படாத பாரதீய ஜனதா கட்சியின் பந்த் அழைப்பு, மகாராஷ்டிரா மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள ஆதரவாளர்களால் கைக் கொள்ளப்பட்டது. அவர்கள் அரசுக்குச் சொந்தமான அருங்காட்சியகத்தை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர். அங்கிருந்த பல்வேறு அரியக் கலைப் பொக்கிஷங்கள் சுக்குநூறாகிப் போயின. மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். தெற்கு மும்பைப் பகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் கோபிநாத் முண்டே நேரடியாகவே கலவரத்தில் ஈடுபட்டுக் கைதானார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த அழகிய இளம்பெண் ஒருவர், துப்பாக்கியுடன் போராட்டத்தில் கலந்துகொள்ள பயிற்சி எடுத்துக் கொண்டது, போராட்டத்தின் தீவிரவாதத்தை நாட்டுக்கு உணர்த்தியதாகவும் எடுத்துக் கொள்ளலாம். பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட காவி அழைப்புகளின் உள்நோக் கத்தின் தீவிரத்தையும் புரிந்துகொள்ளலாம்.

ஜூலை 7 - ம் தேதி வரை ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் கலவரங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன. 'பிரிவினைவாதிகள் மற்றும் தேசிய எதிர்ப்பாளர்களிடமிருந்து நாட்டின் இறையாண்மையைக் காக்கவும், ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியம் தன்னாட்சியுடன் செயல்படவும் மத்திய அரசு போதுமான துணை ராணுவத்தை ஜம்மு - காஷ்மீருக்கு அனுப்பி வைக்கவேண்டும்' என அறிக்கைவிட்ட பாரதீய ஜனதா கட்சியே, இந்தக் கலவரத்தை முன்னின்று நடத்திவைத்ததுதான் சிறப்பு!

மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றாலும், ஆட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்ட குலாம் நபி ஆசாத், 'ஆட்சி கவிழாது' என்று கூறிவந்தார். ஆனால் 22 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் அந்தக்கட்சி எப்படி 89 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் நம்பிக்கை பெறமுடியும் எனும் ஆச்சர்யத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டே இருந்தார் என்பது மட்டும் உண்மை. அதை மத்திய அமைச்சரும் ஜம்மு - காஷ்மீர் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளாருமான சைபுதீன் ஜோஸ் வேறு ஆமோதித்துக் கொண்டே இருந்தார். ஏதேனும் அற்புதங் கள் நிகழ்ந்துவிடுமோ எனும் எதிர்பார்ப்பில், நாடு விழிகளை விரியவைத்துக் காத்திருந்த அதிசயமும் நடந்தது.
ஜம்மு - காஷ்மீரின் ஆளும் கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸுக்கு 22 இடங்களும் அதற்கு ஆதரவு தந்துவரும் சுயேட்சைகள் 15 - ம் சேர்ந்து, 37 இடங்களே இருந்தன. இதற்கடுத்து, எதிர்க்கட்சியாக இருந்துவந்த தேசிய மாநாட்டுக் கட்சி 24 உறுப்பினர்களை வைத்திருந்தது. அடுத்த இடத்தில்20 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக, மக்கள் ஜனநாயகக் கட்சி இருந்தது. 89 உறுப்பினர்களைக் கொண்டக் கொண்ட சட்டசபையில், அவை போக மற்றவை உதிரிகள்!

மற்ற மாநிலங்களைப்போல தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் இல்லை. இங்கே ஆறு ஆண்டு காலம் . இது, அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து 370 - வது விதியின்படி கிடைத்து வருகிறது. தனிப்பெரும்கட்சி எனும் அளவில் தேசிய மாநாட்டுக் கட்சியே, குறைந்த வித்தியாசத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றியக் கட்சியாகவும் இருந்துவந்தது. ஆனால் அந்தக் கட்சி ஆட்சியமைக்கும் உரிமையைக் கோரவில்லை.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் முப்தி முகம்மது ஸயீதுக்கு மாநிலத்தின் முதலமைச்சராக ஆகவேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்துவந்தது. தேர்தலில் எதிர் எதிராய்ப் போட்டியிட்டு ஜெயித்த காங்கிரஸ் கட்சியுடன் முப்தி முகம்மது ஸயீது, ஒரு உடன்பாட்டுக்கு வந்தார். அந்த உடன்பாட்டின்படி, முதல் மூன்றாண்டு காலம் மக்கள் ஜனநாயகக் கட்சி மாநிலத்தை ஆட்சிசெய்து கொள்வது. அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆட்சிசெய்து கொள்வது. இதனடிப்படையில், முன்னெப்போதும் இல்லாத சரித்திரமாக இரண்டு முக்கியக் கட்சிகளின் கூட்டணி அரசு 2002 - ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஆட்சிசெய்யத் துவங்கியது. இதன்மூலம், மாநில முதல்வராகும் தனது நிறைவேறாதக் கனவை, முப்தி முகம்மது ஸயீது நனவாக்கிக் கொண்டார்.

மூன்றாண்டு கால ஆட்சியில் மாநிலம் என்ன சுபிட்சம் கண்டது எனும் கேள்வியை மறந்துவிட்டு, நிகழ்காலத்தைப் பார்த்தால்... உடன்படிக்கையின்படி, அடுத்த மூன்றாண்டு காலத்தை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். நாற்காலியை விட்டுக்கொடுக்க முப்தி முகம்மது ஸயீதின் ஆட்சி சுகம், இடம் தரவில்லை என்பதே உண்மை. உடன்படிக்கையின் நல்லெண்ணத்துக்கு அப்போதே வேட்டுவைக்கவும் அவர் முயன்றுவந்தார். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களும் 'லொள்ளு பிடித்த மாநிலத்தை' அவரே ஆண்டு கொள்ளட்டும் என்று விட்டுவிடும் எண்ணத்துக்கு வந்துவிட்டார்கள்.

ஆனால் ஜம்மு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்., மேலிடத்தில் எண்ணங்களுக்கு ஒத்துப் போகவில்லை. இதையடுத்தே குலாம் நபி ஆசாத், முதல் அமைச்சராகும் வாய்ப்புக்கு உள்ளானார்.

பரந்துவிரிந்த இந்தியத் துணைக்கண்டத்தில், இரண்டு தலைநகரங்களைக் கொண்டிருக்கும் மாநிலம் என்றால் அது, ஜம்மு - காஷ்மீர் மட்டும் தான். ஜம்மு - காஷ்மீர் பகுதியை ஆண்டு வந்த டோக்ரா வம்சாவழியினர் 1880 - களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கேட்டுக்கொண்டதன் பேரில், கோடைக்காலத் தலைநகரமாக ஸ்ரீநகரையும் குளிர்காலத் தலைநகரமாக ஜம்முவையும் வைத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. இந்த ஏற்பாடு இன்று வரைத் தொடர்கிறது. அதுமட்டுமின்றி, இவ்விரு தலைநகர்களும் எந்தவொரு விஷயத்திலும் இருவேறு கருத்துகளைக் கொண்ட சக்தி மையங்களாகவும் இருந்து வருகின்றன. பன்னெடுங்காலமாகவே இந்தநிலை நீடித்து வருவதால், இரு மையங்களிலும் வகுப்புவாதத் தன்மை மிகுந்து இரு எதிரெதிர் பிரிவுகளாகப் பிளவுபட்டுக்கொள்ளும் மனோநிலையும் கருத்துமோதல்களும் தொடரவே செய்கின்றன.
அதன் நீட்சியாக காங்கிரஸ் கட்சி, ஜம்முவில் அதிக இடங்களைக் கைப்பற்ற முடிந்தது. மக்கள் ஜனநாயகக் கட்சி, காஷ்மீரின் தெற்குப்பகுதியில் மட்டுமே இடங்களைக் கைப்பற்ற முடிந்தது. மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஜம்முவில் காலூன்ற வேண்டும்... மாநிலம் முழுவதும் தனது கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கமும் இருந்தது. ஆனால் அது நினைத்தது போல் நடக்கவில்லை. 2002 - தேர்தலில் அது காஷ்மிரில் 14.64 சதவீத ஓட்டுக்களையேப் பெற்றது. மாநிலம் முழுவதும் அதன் ஓட்டு சதவீதம், 9.28 தான்! ஆனால் எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக்கட்சி 28.28 சதவீத ஓட்டுகளுடன் 24 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. தேசிய மாநாட்டுக்கட்சியின் ஓட்டுவிகித்தை உடைக்க, அதுசெய்த தந்திரங்கள் எதுவும் பலன் எதையும் தரவில்லை.

ஸ்ரீஅமர்நாத் கோவில் வாரியத்துக்கு நிலம் ஒதுக்கிய விஷயத்தில் கையெழுத்துப் போட்டுவிட்ட, பின்னர் ஜகா வாங்கியதன் பின்னணியில், முதல் மூன்று ஆண்டுகள் முதலமைச்சராகவும் அடுத்த 23 மாதங்கள் கூட்டணி ஆட்சியாளராகவும் இடம் பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு, அரசியல் உள்நோக்கம் இருப்பது வெட்ட வெளிச்சம்!

ஸ்ரீஅமர்நாத் கோவில் வாரியத்துக்கு, தற்போது நிலம் வழங்கப்பட்ட அதே பால்டால் பகுதியில் ஏற்கனவே 5 நிரந்தர தங்குமிடங்கள் உள்ளன. இந்தத் தங்குமிடங்களில் முதலாவதாகக் கட்டப்பட்டக் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டியது, மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஷேக் முகம்மது அப்துல்லா. அதைத் தொடந்து பரூக் அப்துல்லா காலத்தில் நான்கு கட்டுமானங்கள் உருவாக்கப் பட்டன. இதனால், தேசிய மாநாட்டுக் கட்சி இந்த விஷயத்தில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதுபோல நடந்துகொண்டாலும், அங்கு புதிய கட்டுமானங்கள் எழுந்தால், சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மட்டும் சொல்லி அடக்கி வாசித்தது.

இந்தப் பிரச்சனையை மக்கள் ஜனநாயகக் கட்சி, சமயோசிதமாகக் கையில் எடுத்துக் கொண்டு தேசிய மாநாட்டுக் கட்சியை சந்தடி சாக்கில் சாத்தி வருகிறது. இதற்கானப் பின்னணியை ஆராய்ந்தால், ஜம்மு பகுதியில் ஆழமாக வேறூன்றியிருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சியைப் போல , நம்மால் அந்தப் பகுதியில் காலூன்றி எதுவும் செய்ய முடியவில்லையே எனும் கொம்புத்தேன் ஆதங்கம் அதில் தொக்கிக் கிடக்கும்!

தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஓட்டுவங்கியாகத் திகழும் ஜம்மு பகுதியில்தான், தன்னாட்சி கோரும் பிரிவினைவாத அமைப்புகள் எல்லாமே தழைத்தோங்கி இருக்கின்றன. இந்த அமைப்புகள் முப்தி முகம்மது ஸயீதின் அரசியல் நடவடிக்கைகளை சிறிதும் விரும்பாதவை. அவர் உயிருக்கு குறி வைத்தவை. முதல் அமைச்சராக இருந்தபோது நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் முப்தி முகம்மது ஸயீது, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி வந்திருக்கிறார்.
வரும் அக்டோபரில்/ நவம்பரில் மாநிலத்துக்கான பொதுத்தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் ஓட்டுக்களைப் பொறுக்கும் ஆயத்தத்துக்கு தயாராக ஏதாவது ஒருகாரணம் வேண்டும் அல்லவா? அதைத்தான், மாநிலத்தின் முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்றுமே நில விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட, யாரும் யாருடனும் சேரமுடியாத அளவில் விழி பிதுங்கித்தான் நிற்கின்றன.

அதேவேளையில், அவலை நினைத்து உரலை இடித்தக் கதையாக, மதவாத அமைப்பின் முக்கிய முகமான பாரதீய ஜனதா கட்சி, ஒரு மாநிலத்தின் நில விவகாரத்தை வைத்து, நாடெங்கும் பிரச்சாரம் செய்ய ஏதுவாக வழிவகையும் செய்து கொடுத்திருக்கின்றன.

இதுதான் பள்ளத்தாக்கு அரசியல்!

ஜூலை 7. 'ஆட்சி கவிழாது' என்று கூறிவந்த குலாம் நபி ஆசாத், நம்பிக்கைத் திர்மானத்தின் மீது உணர்ச்சி பொங்கப் பேசிவிட்டு, சபாநாயகரிடம் நம்பிக்கைத் தீர்மானக் கோரிக்கையை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதி வேண்டியதுடன் அவர் அடி சறுக்கிப் போனார்.

பியூட்டிபுல் காஷ்மீரும்...வொண்டர்புல் காஷ்மீரும்...

உயர்ந்த மலைகள், அதன் உச்சியில் பனிச்சிகரங்கள், 'சட்'டென்று சரிந்து விழும் பள்ளத்தாக்குகள், அதனிடையே ஓடும் ஜீவ ஆறுகள், வழிநெடுகிலும் பசுமை என்று கி.மு.3000 ஆண்டுகளிலிருந்தே காஷ்மீர்ப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் மண்டிக் கடக்கின்றன.

இயற்கை மீது ஆர்வமும் மோகமும் கொண்டவர்களுக்கும், காஷ்மீரின் அழகைப்பற்றித் தெரிந்தவர்களுக்கும் அது ஒருகனவுப் பிரதேசமாகவும், வாழ்வில் ஒருமுறையாவது போய்வரவேண்டும் எனும் வேட்கையைத் தருவதாகவுமே இருந்து வந்திருக்கிறது.

அதுபோல காலம் காலமாகவே அது, சிறிதும் பெரிதுமான சச்சரவுகளையும் கொண்ட பிரதேசமாகவே அது, இருந்து வருகிறது.
கி.மு. 250- ல் மாமன்னர் அசோகர், தற்போதைய தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து மூன்று மைல் தொலைவிலிருக்கும் ஸ்ரீநகரியை தலைநகராக நிர்மாணித்தருக்கிறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் பல மன்னர்கள் காஷ்மீரில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்திருக்கிறார்கள்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மன்னர் லலிதாதித்யா என்பவர்,சிறப்பாக ஆட்சிசெய்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

12 - ம் நூற்றாண்டின் மத்தியில் முஸ்லிம்கள், காஷ்மீர் மீது தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். அப்போதைய பதிவுகள் எல்லாமே பெரும்பான்மையாக இருந்த முஸ்லிம்களும் இந்துக்களும் நல்லிணக்கத்தோடும் நட்போடும் இருந்தார்கள் என்றே காணப்படுகிறது. காஷ்மீர் அரசியல் சரித்திரத்தின் மிக முக்கிய நபராக முஸ்லிம் மன்னர் மீர் ஷா குறிப்பிடப்படுகிறார். அவரது ஆட்சிக் காலத்தில் பள்ளத்தாக்கு அமைதிப் பிரதேசமாகவும் நேர் மையான நிர்வாகம் கொண்டதாகவும் இருந்து வந்துள்ளது.

மீர் ஷாவின் வாரிசுகள் திறமையாக ஆட்சி செலுத்தாததால், காஷ்மீரில் 225 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மன்னர்களின் ஆட்சி அரியணையேறியது.

ஆனால் அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. வெறுமனே ஆண்டுகளில் மொகலாய மாமன்னர் அக்பரால் காஷ்மீர் மீண்டும் கைப்பற்றப்பட்டது. நீண் டு பரந்த தேசத்தை மாமன்னர் அக்பர் ஆட்சி செய்தாலும் அவருக்குப் பிடித்தமான பகுதியாக காஷ்மீர் இருந்து வந்திருக்கிறது. மூன்று முறை காஷ்மீீ ருக்கு பயணம் மேற்க்கொண்ட அக்பர், தன்னுடன் பெரிய எண்ணிக்கையில் படிப்பாளிகள், அறிஞர்கள், ராணுவ அதிகாரிகள், ராஜா தோடர் மால் போன்ற அமைச்சர்கள் ஆகியோருடன் வந்து புணரமைப்புப் பணிகளைச் செய்துவிட்டுச் சென்றதால், நாடு முழுவதும் காஷ்மீரின் பெயர் பரவியது. காஷ்மீரின் அழகை ரசிக்கவென்று பார்வையாளர்கள் வரத்துவங்கியது, அக்பரின் வரவுக்குப் பின்னால் தான்!

அதேவேளையில் மன்னர் ஜஹாங்கீர் காலத்தில், பார்வையாளர்களின் வருகை ஆயிரக்கணக்கில் உயர்ந்தது. அவரே பெரும் கூட்டத்துடன் பதின் மூன்று முறை வந்து சென்றுள்ளார். காஷ்மீரின் மலைகளும் சினார் மரங்களுக்கிடையே கம்பீரமாக ஓடும் ஓடைகளும், அழகுமிகு ஏரியும் தன்னைக் கவர்ந்ததாகக் குறிப்பிடும் மொகலாயச் சக்கரவர்த்தி ஜஹாங்கீர். தனது கைகளாலேயே தால் ஏரிக்கரையில் ஷாலிமார் தோட்டத்தையும் நிஷாத் தோட் டத்தையும் உருவாக்கினார். அவரது பெயரை காஷ்மீர் இன்னும் அழகுடன் சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் வேறு எந்த மன்னருக்கும் கிடைக்காதச் சிறப்பு ஜஹாங்கீருக்கு மட்டுமே உண்டு. அந்த அளவுக்கு அவர் காஷ்மீரை நேசித்தார் என்பது வரலாற்றுப் பதிவு.
மனைவியின் நினைவாக தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹான், அதற்கு முன்பே எண்ணற்ற அறிஞர் பெருமக்கள் புடைசூழ பலமுறை காஷமீர் பயணம் மேற்கொண்டு, அம்மாநிலத்தைச் சிறப்பித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் மன நிம்மதி வேண்டியும், உடல் ஆரோக்கியம் பேணவும், ஆன்மீக் தொழுதலுக்கும் உரிய இடமாக காஷ்மீர் விளங்கியிருக்கிறது. ஷாஜஹான், காஷ்மீரில் சாஷ்மாஷி தோட்டமும், ஷாலிமார் தோட்டத்தின் ஒரு பகுதியையும் நிர்மாணித்து மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.

சரித்திர ஆசிரியர்களால் இகழப்பட்ட அவுரங்கசீப்பும் கூட, காஷ்மீர் அழகில் மெய்மறந்தவர் தான்! அவருடன் பயணம் மேற்கொண்ட பிரஞ்சுப் பயணி பிரான்சிஸ் பெர்னியர், காஷ்மீர் மக்களை வெகுவாகப் புகழ்கிறார். "காஷ்மீரிகள் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிக்கிறார்கள். கவிதையிலும் விஞ்ஞானத்திலும் அவர்கள் பெர்ஷியர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல! அவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும் தொழில் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் தொழில் நுணுக்கம், பல்லக்குகளிலும், படுக்கை விரிப்புகளிலும், மைக்கூடுகளிலும், கோடாரிகளிலும், சிறு கரண்டிகளிலும் கூட தெரிகிறது. அவர்களின் கைப்பட்ட சால்வைகள் உள்ளிட்ட எல்லாப் பொருட்களிலுமே அழகு மிளிர்கிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அந்தப் பயன்பாடு இருக்கிறது"

நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட காஷ்மீர், 20 நூற்றாண்டின் மத்தியில் தான் குழப்பத்துக்கு உள்ளாகிறது. இந்தியா முழுவதும் பற்றியெறிந்த சுதந்திரத் தாக்கம், அங்கே பெரிய அளவில் பாதிப்பையும் தரவில்லை. மன்னராட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாடு அங்கும் நிலைத்திருந்தது.

1931 - ல் காஷ்மீர் மிகப்பெரிய வன்முறைக் கலவரத்தை சந்தித்தது. அக்கலவரத்தின் பின்னணியில் ஷேக் அப்துல்லாவும் அவரது முஸ்லிம் மாநாட் டுக்கட்சியும் இருந்து வந்ததாக, வரலாறு பதிவு செய்துள்ளது. பின்னர் அக்கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சியாக புதுப்பெயர் சூட்டிக்கொண்டது.

1947 - ல் இந்திய - பாகிஸ்தான் ( பாகிஸ்தான் - இந்திய ? ) ப் பிரிவினையின் போது, பிற மாநிலங்களைப் போல இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ காஷ்மீர் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. இந்திய - பாகிஸ்தான் ( பாகிஸ்தான் - இந்திய ?) பிரிவினைக்குப் பின் சரியாக 67 - ம் நாள், காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் தனது முதல் ஊடுருவலை நடத்தியது. அதன் பின்பே, காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து சிறப்பு அந்தஸ்துடன் ஒரு மாநிலமாக இயங்கிவருகிறது.

தற்போது பாகிஸ்தான் ஊடுருவல் நடத்தி ஆக்கிரமிப்பு செய்திருக்கும் ஆஜாத் காஷ்மீர் பகுதி முஸாபாராபாத்தைத் தலைநகராகக் கொண்டு, 8 மாவட்டங்களுடன் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன், தனியரசாக செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 14,000 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அப்பிரதேசத்தில், ஒருகோடி மக்கள் வரை வசிக்கின்றனர்.

1990 - க்குப் பிறகு, ஜம்மு- காஷ்மீரில் சடந்துவரும் தன்னாட்சி அமைப்புகளின் போராட்டம், பாகிஸ்தான், சீனாவின் ஊடுருவல் ஆகிய பிரச்சனை களால் காஷ்மீருக்கு வரும்பயணிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிட்டது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுடன் நடந்துவரும் நல்லெண்ண அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம், ஒப்பந்த அடிப்படையில்(?) அமைதி நிலவி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீஅமர்நாத் கோவில் வாரியத்துக்கு நிலம் வழங்கியது தொடர்பாக எழுந்தப் பிரச்சனையும் அதைத் தொடர்ந்து நடந்த ஆட்சிக் கலைப்பும், மற்றொரு வில் லங்கத்துக்கான விஷயமாகவே இருக்கிறது.

'காஷ்மீர்... பியூட்டிபில் காஷ்மீர்..., காஷ்மீர்... வொண்டர்புல் காஷ்மீர்...,' என்று தமிழ்த் திரைப் படப்பாடலொன்றில் ஆதுரமானக் குரலில் ஆராதிக்கப் பட்டது போல, அந்தப்பகுதி இன்னும் அழகுடன் அதிசயமாக இருந்தாலும், அம்மாநில மக்களிடம் உற்சாகம் எதுவும் காணோம். அவர்கள் பள்ளத்தாக் கின் அரசியலில் துவண்டு போயிருக்கிறார்கள்.
பனிலிங்க தரிசனம்மாநிலம் முழுவதும் போராட்டம், வன்முறை, கலவரம் என்று தீப்பிடித்து எரிந்தபோதும் ஸ்ரீஅமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கச் செல்லும் பயணிகள் மேலே செல்ல தொடர்ந்து அனுமதிக்கப்பட்டனர். மழைக் காரணமாக மட்டுமே இரு தினங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜம்முவிலிருந்து 450 கி.மி. தொலைவிலும், ஸ்ரீநகரிலிருந்து அனந்தநாக் மாவட்டம் பால்டாவிலிருந்து 12 கி.மி. தொலைவிலும் உள்ள பனிலிங்கக் கோவிலுக்கு இவ்விரு பாதை களின் வழியே நாளொன்றுக்கு 25,000 பயணிகள் சென்றுள்ளனர்.

ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் இயற்கையாகவே லிங்கவடிவில் உருவாகும் பனிக்குவியல், மற்ற கால கட்டத்தில் வேறுவடிவத் திட்டாக மாறிவிடுகிறது. பெளர்ணமி நாள் இரவின் போது தரிசனம் செய்வது புண்ணியமாகக் கருதப்படுகிறது.

பனிலிங்கம் குறித்த வேறுவிதமான சர்ச்சைகள், அவ்வப்போது எழுவதும் அடங்குவதும் மகரஜோதி போன்று வாடிக்கையான ஒன்றுதான்!

சமீபத்திய நிகழ்வின் போது, ஸ்ரீஅமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கச் சென்ற பக்தர்களுக்கு, வழிநெடுகிலும் முஸ்லிம் மக்கள் தங்க இடமும், உண்ண உணவும் கொடுத்து உதவி செய்துள்ளனர். பிரச்சனை என்பது, இந்து - முஸ்லிம் மக்களிடையே இல்லை. அதை மூலதனமாக்கிச் செயல்படும் அரசியல் கட்சிகளிடம் தான் உள்ளது!
நன்றி: புதிய காற்று

No comments:

Post a Comment