Tuesday, September 6, 2011

இது, கொஞ்சம் ஓவர் தான்!




எஸ். அர்ஷியா

ன் முதுகை தன் கையாலேயே தட்டிக்கொள்ளச் செய்யும் 'நல்லவர்' அறிக்கை யை ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.டி.நானாவதி, குஜராத் முதல் வர் நரேந்திர மோடியின் கையில் கொடுத்துவிட்டார்.
அந்த விசாரணைக் கமிஷனை நியமிக்கும் போது, மோடி தன் மனதுக்குள் என்ன நினைத்து அமைத்தாரோ... அதுவே நடந்துவிட்டிருக்கிறது.
அசுர குணம் கொண்ட ஓர் மனிதனை, 'அய்யோ பாவம். அவர் அப்பாவியாக்கும்!' என்று வரிந்து கட்டி நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கும் அந்த அறிக்கை, 'குஜராத் ரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம் மத போதகர் மெளலானா உமர்ஜியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைச் செயல்' என்றும் அறுதியிட்டுக் கூறியுள்ளது.
நாடு முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்து, தேசத்திற்கு பெருமையையும், உலக நாடுகளிடம் அன்பையும் பெற்ற(?) சங் பரிவார அமைப்புகள், இந்த அறிக்கையால் மேலும் மகிழ்ந்து போயிருக்கின்றன. காவிக் கொடிகள் சிலுசிலுத்துப் பறக்கின்றன.
இரண்டாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான அப்பாவி முஸ்லிம்களையும் அவர்களின் சொத்துகளையும் தீ வைத்துக் கொளுத்தியவர்களுக்கு, 'ஊருவிட்டு ஊரு வந்து உழைத்துப் பிழைத்த, 'பெஸ்ட் பேக்கரியின் ஊழியர்களை, கதவைப் பூட்டி எரித்துக் கொன்றவர்களுக்கு, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, குறைமாதக் கருவை வாள் முனையில் உருவியெடுத்து, 'ஒரு முஸ்லிம் கூட உயிரோட இருக்கக் கூடாது' என்று கொக்கரித்தவர்களுக்கு, கைக்கூப்பிக் கும்பிட்டு உயிர்ப்பிச்சைக் கேட்ட நபரை ஈவுயிரக்கமின்றி வெட்டிக்கொன்று குதூகலித்தவர்களுக்கு, இந்த அறிக்கை துளிக்கூட சங்கடத்தைக் கொடுக்க வில்லை. மாறாக ¨தைரியத்தையும், இனி எதையும் செய்ய லாம் என்ற துணிச்சலையும் தான் கொடுத்து இருக்கிறது.
பொய்ப் புனைந்துரைகளைக் கொண்ட இந்த அறிக்கை வெளியானவுடன், காவிகளின் சலசலப்பும், கொக்கரிப்பும் கூடியிருக்கிறது
அதை, பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் வாயாலேயே கேட்போம். 'இறுதியில் உண்மை வெளிவந்துவிட்டது. பொது மக்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளியிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி மீதும், முதல்வர் நரேந்திரமோடி மீதும் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யென உறுதியாகி யுள்ளது. குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை சரி என்று நிரூபணமாகியிருக்கிறது. அந்த சம்பவம் தீ விபத்து அல்ல. திட்டமிட்ட வன் செயல் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனி, நானாவதி கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டுமென வற்புறுத்துவோம். லாலு பிரசாத் யாதவால் நியமிக்கப்பட்ட யூ.சி.பானர்ஜி கமிஷனின் அறிக்கை, அரசியல் வன்மம் கொண்டது. அரசியல் நிர்பந்தங் களால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட அறிக்கை அது. அதன் பின்னணியில் பெரும் அழுத்தங்களும் தலை களும் உள்ளன. சங்பரிவாரங்கள் அப்பழுக்கற்றவை' என்று வர்ணித்திருக்கிறார்.
தீப்பந்தத்தால் தலையைச் சொறிந்து கொள்பவர்களால் மட்டுமே, இப்படி பிதற்ற முடியும். காவிகளுக்கு, இது கைவந்தக் கலை!
கடந்த 2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ம் தேதி கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்துக்கு உள்ளாகிறது. அந்த ரயிலின் எஸ் - 6 பெட்டியில் பயணம் செய்த கரசேவகர்கள் 58 பேர் உயிரிழக்கிறார்கள்.
இதையடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்த் பரிஷத் ஆகிய சங் பரிவாரங்கள் வன்முறையில் இறங்குகின்றன. முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்படுகின்றனர். அவர்களின் சொத்துகள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து கள் அழிக்கப்படுக்கின்றன.
அனாதரவானவர்கள் அபயம் தேடி போலிஸ் நிலையங்களுக்கு ஓடுகிறார்கள். அங்கிருப்பவர்கள் அரசு விசுவாசத்துக்கு ஆளாகி, உள்ளே வந்தவர்களை வெளியே அனுப்பி வைக்கிறார்கள். `உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்` என்று உன்மத்தமாய் அறிவுரைக் கூறி வெளியேற்றுகிறார்கள்.
அப்போது மாநில முதல்வர் நரேந்திர மோடி வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. அதனால் சங் பரிவார அமைப்பு கள் வன்முறையை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டே போயின. அதைக் கட்டுப்படுத்த அப்போதைய பிரதமர் வாஜ்பாயியும் முயற்சிக்கவில்லை எனும் குற்றச் சாட்டும் உலகளவில் உள்ளது.
வன்முறைக் கும்பலுக்கு இந்த செய்கைகள் மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கனவே கட்டுப் பாடற்றவர் களாக வளைய வந்தவர்கள் அவிழ்த்து விடப்பட்ட மிருகங் களாக தெருக்களில் அலைகிறார்கள். அஹிம்சையை போதித்த மகாத்மாவின் மாநிலம், ஹிம்சைகளின் தலை நகராகிறது.
அதிர்ந்து போன பொது மக்கள், நீதி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், உலக நாடுகளில் உள்ள நலம்விரும்பிகள் மத்திய அரசைத் தலையிடச் சொல்லி வற்புறுத்துகின்றன. கவிமனம் நிறைந்த பிரதமர் வாஜ்பாயி கல்மனம் கொண்டவராக தன்னைக் காட்டிக்கொண்ட சந்தர்ப்பத்தை நாட்டிற்கு தருகிறார்.
மோசமாக வளர்ந்து வரும் மோடியை எதிர்த்து அரசியல் செய்ய ஆர்.எஸ்.எஸ்சால் கைகள் கட்டப்பட்டிருந்த வாஜ்பாயி, குடியரசுத் தலைவரின் தலையீட்டின்பேரில் துயில் கலைகிறார். தேசம், தலை குனிந்து நின்றது.
உலகமே உற்றுப் பார்த்த அந்த சம்பவங்களை விசாரிக்க மாநில முதல்வர் நரேந்திர மோடி, ஓர் நபர் விசாரணைக் கமிஷனாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஜி.ஷாவை நியமிக் கிறார். ஆடுகளின் குறைகளைக் கேட்க, ஓநாய் ஒன்று வருகிறது.
சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் தண்டனை வழங்குவதாகச் சொல்லி, ஓர் நபர் விசாரணைக் கமிஷனின் நீதிபதி கே.ஜி.ஷா, சரமாரியாக முஸ்லிம்களுக்கு மரண தண்டனை விதித்து விடுகிறார். இதைத்தானே மோடி எதிர்பார்த்தது.
அவரது சினிமாத்தனமான மானாவாரி அதிரடித் தீர்ப்பு களால் நீதித்துறையே திக்குமுக்காடிப் போனது. அதன் பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்டு, அவரது தீர்ப்புகளில் பலவற்றைப் பரிசீலித்து, பலரது உயிரைக் காப்பாற்றியது.
நீதித் துறையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஜி.ஷாவின் 'தாம் தூமில்' அதிர்ந்து, தலைமையை மாற்றச் சொல்லி வற்புறுத்தின. இக்கட்டுக்குள்ளான குஜராத் மாநில மோடி அரசு, காவிப் பின்னணி கொண்ட மற்றொரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜி.டி. நானாவதியைப் பிடித்துக்கொண்டு வருகிறது. அவரை முதன்மையாகப் போட்டு, கமிஷன் நடந்து வந்தது.
ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி கே.ஜி.ஷா, கடந்த மார்ச் மாதம் மூப்படைந்து உயிரிழக்க... அவரது இடம் மற்றும் ஒரு காவிப்படையின் ஆதரவு பெற்ற குஜராத் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) அக்ஷய் மேதாவால் நிரப்பப் பட்டது.
அந்த இருவரும் ஆறாண்டுகளும் ஆறுமாதங்களும் ஓய்வில்லாமல் விசாரித்த(?) தகவல்களின் அடிப்படையில், அறிக்கையின் முதல் பகுதியை 2008 செப்டம்பர் 25 ம் தேதி சமர்ப்பித்து விட்டனர்.
விசாரணையின்போது, நரேந்திர மோடிக்கும், குஜராத் அரசுக்கும், மாநில போலிசுக்கும் எதிராகச் சொல்லப்பட்ட சம்பவங்கள் எதையும் பதிய, அக்குழு மறுப்பதாகக் குற்றச்சாட்டுகள் அப்போதே எழுந்தன.
ஆயிரத்துக்கும அதிகமான சாட்சியங்களின் அடிப்படையில்(?) 168 பக்கங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை, மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், முதல்வர் நரேந்திர மோடியிடம் வழங்கிய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜி.டி.நானாவதி,' அந்த சம்பவத்தின் முதல் பகுதி அறிக்கையை முதல் கட்டமாகத் தாக்கல் செய்திருக்கிறோம். அடுத்தக் கட்ட அறிக்கையை இந்த ஆண்டின் இறுதிக்குள் சமர்ப்பிக்க முயலுவோம். அதில், சம்பவத்தின்போது போலிஸ் நடந்து கொண்ட முறை, அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் இடம் பெறும். தேவைப்பட்டால், மூன்றாவது கட்ட அறிக்கை தயாரிப்பிலும் ஈடுபடுவோம். இது ஒரு வித்தி யாசமான கமிஷன். நீதி விசாரணைக்குழு இல்லை. அதே வேளையில் உண்மை கண்டறியும் அமைப்பாகும்!' என்று, தன் முதுகிலும் தானே தட்டிக் கொள்கிறார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, 'இதில் துளிக்கூட சம்பந்தம் இல்லை' என்று வலிந்து சொல்லும் அந்த அறிக்கை, முஸ்லிம் மதபோதகர் மெளலானா உமர்ஜியை சுற்றியே கட்டமைக்கப் பட்டுள் ளது. சம்பவத்தின் முதல் நாளிரவு அவர் 140 லிட்டர் பெட்ரோலை சேகரித்து வைத்து, அடுத்த நாள் சம்பவத்துக்கு பயன்படுத்தினார்.
எஸ். - 6, எஸ். - 7 பெட்டிகளின் கதவுகளை ஹஸன் லாலா என்பவர் வலுக்கட்டாயமாகத் திறந்து, உள்ளே தீப்பந்தங் களை வீசினார் என்று முடிவுக்கு வருகிறது.
அதேவேளையில், 'மாநில முதல்வர் நரேந்திர மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ, அல்லது போலிஸ் ஆகியோரின் பங்கு இந்த சம்பவத்தில் துளிகூட இல்லை. அவர்கள் எடுத்த நடவ டிக்கைகளில் எந்த இடத்திலும் குறைபாடுகள் தென்படவில்லை' என்றும் முழு பூசணிக் காயை உள்ளங்கைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறது, அந்த அறிக்கை!
குஜராத் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர் போராட்டங்களை நடத்திவரும் `மக்களுக்கான பொது நீதி` அமைப்பின் இயக்குநர், டீஸ்டா செதல்வாட், 'அப்போதைய ஆளும் அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவத்தை பூசி மறைக்கும் இந்த அறிக்கை, வரப் போகும் தேர்தலை மனதில் வைத்து வெளியிடப் பட்டுள்ளது. மோடி என்ன நினைத்திருக்கிறாரோ... அதுவே அறிக்கையாக வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் குஜராத் வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க, ராகவன் கமிட்டியை அமைத்திருக்கிறது. அதன் அறிக்கை டிசம்பருக் குள் வரவிருக்கிறது. அதற்கு முன் என்ன அவசரம் என்று தெரியவில்லை!' என்கிறார்.
எஸ். - 6, எஸ். - 7 பெட்டிகளின் கதவுகளை ஹஸன் லாலா என்பவர் வலுக்கட்டாயமாகத் திறந்து, உள்ளே தீப்பந்தங் களை வீசினார் என்று முடிவுக்கு வருகிறது. அதே வேளையில், 'மாநில முதல்வர் நரேந்திர மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ, அல்லது போலிஸ் ஆகியோரின் பங்கு இந்த சம்பவத்தில் துளிகூட இல்லை. அவர்கள் எடுத்த நடவ டிக்கைகளில் எந்த இடத்திலும் குறைபாடுகள் தென்படவில்லை' என்றும் முழு பூசணிக்காயை உள்ளங் கைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறது, அந்த அறிக்கை!குஜராத் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர் போராட்டங்களை நடத்திவரும் `மக்களுக்கான பொது நீதி` அமைப்பின் இயக்குநர், டீஸ்டா செதல்வாட், 'அப்போதைய ஆளும் அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவத்தை பூசி மறைக்கும் இந்த அறிக்கை, வரப் போகும் தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. மோடி என்ன நினைத்திருக் கிறாரோ... அதுவே அறிக்கையாக வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் குஜராத் வன்முறை சம்பவம் குறித்து விசரிக்க, ராகவன் கமிட்டியை அமைத்திருக்கிறது. அதன் அறிக்கை டிசம்பருக்குள் வரவிருக்கிறது. அதற்கு முன் என்ன அவசரம் என்று தெரியவில்லை!' என்கிறார்.
மத வாத அமைப்புகள் தவிர மற்ற எல்லோராலுமே வரவேற்கப்பட்ட அந்த அறிக்கை, நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்று, முதல்வர் நரேந்திர மோடி யின் தூண்டுதலால் கட்சிக்காரர் ஒருவரால் குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கப்பட்டது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, வேறுகதை!
நானாவதி கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டும் முஸ்லிம் மதபோதகர் மெளலானா உமர்ஜியின் மகன் சாயித் உமர்ஜி, 'சம்பவம் நடந்த ஓராண்டுக்குப் பின் என் தந்தையை போலிஸ் கைது செய்து கொண்டு போனது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த உள்ளூர் போக்கிரி ஒருவன் தந்த தகவலின் பேரில், கைது செய்யப்பட்ட என் தந்தையை சம்பவத்துக்கான மூலக் காரணம் என்று, பின்பு குற்றம் சாட்டி வழக்கை ஜோடித்தனர். இந்த அறிக்கை ஒரு தரப் பானது!' என்கிறார்.
நானாவதி கமிஷன் முன்பு ஆறு ஆண்டுகளாக ஆஜராகி குறுக்கு விசாரணை செய்து வரும் வழக்கறிஞர் முகுல் சின்கா, 'அறிக்கை, சாட்சியங்களின் அடிப்படையில் கட்ட மைக்கப் படவில்லை' என்றும் 'இது எனக்கு ஆச்சரியமாக இல்லை!' என்றும் குறிப்பிடுகிறார்.
மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், 'மோடி அப்பாவி என்று அறிக்கையில் கூறப்பட்டுள் ளதை மக்கள் யாரும் நம்பப் போவதில்லை. அவர் சமூகக் கிருமிகளின் மையம். செய்த குற்றங்களுக் காக அவர் தண்டிக்கப்பட் டிருந்தால், எந்த இளைஞனும் இன்று தீவிரவாதியாக மாறி யிருக்க மாட்டான்!' என்கிறார்.
கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்த அறிக்கை, முதல் கட்டம்... இரண்டாம் கட்டம்... என்று பிரிக்கப்படுவதன் பின்னணி, சந்தேகம் தரக்கூடியதாகவே இருக்கிறது. ஒட்டு மொத்தமாகச் சமர்ப்பிக்கப்படாமல், பாகம் பாகமாக தரப்படுவதன் பின்னணியில், மோடித்துவம் ஒளிந் திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பது, தடை செய்யப்பட்ட சிமி அமைப்பு இந்தியன் முஜாஹிதீன் எனும் பெயரில் செய்யும் கைவண்ணம் தான் என்று மதவாத அமைப்புகள் வாய் வலிக்காமல் சொன்னாலும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் பத்திரிகைகள் கை வலிக்க வலிக்க வலிந்து எழுதினாலும், குஜராத் சம்பவத்தைப் பொறுத்தவரை, 'வெடிக்காத குண்டு'களால் அம்மாநில மக்களுக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி யின் மீது ஒரு சந்தேகக் கண் இருக்கவே செய்கிறது.
அதை மோடி அறியாதவர் இல்லை. தன் மீது படிந்திருக்கும் சந்தேகத்தை திசை திருப்ப வழக்கமான பாணிகளை கையாள்வது, இப்போதைக்கு கூடுதல் ஆபத்தையே தர வல்லது என்பதும் அவருக்குத் தெரியும்.
தற்போது, அதற்குத் தேவை ஒரு புதிய அணுகுமுறை!
தன் மீது படிந்திருக்கும் பழைய அழுக்கையும் புதிய அழுக்கையும் ஒரே நேரத்தில் கழுவிக்கொள்ள அவர் செய்துகொண்ட ஏற்பாடுகளில் ஒன்று தான் நானாவதி கமிஷனின், 'மோடி, ரொம்ப நல்லவ ராக்கும்!' எனும் அறிக்கை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்க முடியும்.
வன்முறை அரசியலால் மூன்று முறை முதல்வராகிவிட்ட நரேந்திர மோடி, 'முந்தைய தேர்தல்களைப் போல, ஓட்டுக்களை அள்ள இனி வன்முறை இந்துத்துவா கை கொடுக்குமா?' எனும் பயத்தில், அவர் தன்னை நல்லவ ராகவும் மாநிலத்தின் ரட்சகராகவும் காட்டிக் கொள்வதற்கு கேட்டுவாங்கிப் போட்டுக் கொண்ட அரிதாரமே, ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.டி.நானாவதியின் நற்சான்றிதழ்!
அணுசக்தி ஒப்பந்தம், ஏறிவரும் உணவுப் பொருட்களின் விலைவாசி, தொழில் நுட்பம் வளர்ந்தாலும் வாழ்க்கைத் தரம் உயராமை, எதிர்வரும் தேர்தல், ஆளும்கட்சி, எதிர்க் கட்சி, இவைபோக மூன்றாவது அணி எனும் பெயரில் எடுக்கப்படும் முஸ்தீபுகள் என்று நாடு கிடக்கும் கிடப்பில், நரேந்திர மோடி கேட்டு வாங்கிப் பூசிக் கொண்டிருக்கும் இந்த அரிதாரம், கொஞ்சம் ஓவர் தான்!

arshiyaas@rediffmail.com
நன்றி : கீற்று

No comments:

Post a Comment