Tuesday, September 6, 2011

கபரஸ்தான் கதவு!


எஸ். அர்ஷியா

ரை அங்குல கனத்தில், இரும்புக்கம்பிகளால் ஆன கதவு, அது! பக்கத்துக்கு இரண்டு கீல்களைக் கொண்ட உயரமான இரட்டைக் கதவு. குத்துக்கீல்கள், ஓட்டை போடப்பட்ட கல்தூண்களில் நுழைக்கப்பட்டு, மறுபக்கப்பட்டை முனைமடித்து விடப்பட்டிருந்து.
ஒன்றுக்கொன்று மிகச்சரியாகப் பொருந்திக்கொள்ளும் இருபாகக்கதவின் பூட்டுத்துவாரத்தில், ஹைதர்காலத்துப் பூட்டு ஒருக்களித்துத் தொங்கிக்கொண்டிருக்கும். அதன்சாவி, பள்ளிவாசலைக் கூட்டிப்பெருக்கி, துடைத்து, பாய்விரித்துப் பராமரிக்கும் மோதினாரின் கைவசம்!
மஹல்லாவில் யாராவது மெளத்தாகிப்போனால், அந்தச்சாவிக்கு வேலைவரும். இல்லாவிட்டால் அது, அங்கேயுள்ள சுவர் ஆணியில் தொங்கிக்கொண்டிருக்கும். அது 'தேமே' என்று தொங்கிக் கொண்டிருக்கும் காலத்தில், சாவிப்பிடி வளையத்திலிருக்கும் வேலைப்பாட்டில் தெரியும் முகம், அழுதுவடிவதாகச் சொல்வார்கள். அதை நான், வேலைமெனக்கெட்டுப் போய்ப் பார்த்ததில்லை. மெளத் சேதிவந்தால், அந்தமுகம் சிரிப்பதுபோல் தெரிவதாகவும் சொல்வார்கள். 'அப்படியா?' என்று மோதினாரை பார்த்துக் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் அவரைப்பார்த்து வேறுவேறு விஷயங்களைப் பேசிவிட்டு, 'இத அவசியம் கேக்கணுமா?' என்ற கேள்வியுடனே திரும்பி விட்டிருக்கிறேன்.
அதற்குக் காரணம் உண்டு. 'தாசில்தார் இஸ்மாயில் தர்கா சங்கக் கபரஸ்தான்' என்று, இரும்பு எழுத் துக்களால் எழுதப்பட்டிருக்கும் அந்தக்கதவு, ஒருமுறை திறக்கப்பட்டால் மூன்று மெளத்துக்களை, நாற்பதாம் நாள் செஹலம் பாத்திஹா முடிவதற்குள் உள்வாங்கிக்கொள்வது வாடிக்கையாக இருந்தது.
உறவுக்காரர்களோ, மோதினாரோ, டெலிபோனோ, தந்தியோ, எந்தவழியில் மெளத் பற்றிய தகவல் வந்தாலும் சரி... உடல்நலமில்லாமல் படுக்கையில் கிடக்கும் வயதான உறவுக்காரர்களை நினைத்துப் பார்த்து, 'அடுத்தது இவராக இருக்குமோ?' என்று கவலைகொள்ளும் நிலையை, கபரஸ்தான் கதவின் திறப்பு உண்டாக்கிவிட்டிருந்தது.
ஏழு தலைமுறைக்கு முந்தைய தாதா இஸ்மாயில், தாசில்தார் உத்தியோகம் பார்த்தவர். அப்போதைய வெள்ளைக்காரத் துரைக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததால், கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அவரது சொத்து என்று தாமிரப்பட்டயம் எழுதி வாங்கியதாகச் சொல்வதுண்டு.
தாதாவுக்கு ஏழு பசங்க. ஒரு பெண். தனது சொத்தை இரண்டு பாகங்களாகப்பிரித்து, அரைப்பங்கை பெண்ணுக்கும் மீதி அரைப்பங்கை ஏழு பாகங்களாக்கி பசங்களுக்குத் தந்ததால், ஏழரைப்பங்காளி என்ற பெயர் எங்கள் குடும்பத்துக்கு நிலைத்துவிட்டது.
வெளியே பெரிய மரங்களை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கும் கபரஸ்தான், எலந்தை, நவ்வா, கொடுக்காப் புளி மரங்களை அடர்த்தியாகக் கொண்ட இடம். ரோட்டை ஒட்டிய அதன் சுற்றுச்சுவர் ஆங்காங்கே காரை உதிர்ந்து, பெயர்த்தெரியாத பச்சைக்கொடிகளால் மூடப்பட்டிருந்தது. கடந்து செல் பவர்களின் பார்வையில் 'ஏதோ தோப்பாக்கும்' என்ற நினைப்பை ஏற்படுத்தத் தவறாது அந்த மரங்கள்!
ஏழரைப்பங்காளி வகையறாவுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த கபரஸ்தான் கதவு திறக்கப்பட்டு உள்ளே நுழைந்தால், நந்தவனத்தின் குளுமையை உணரமுடியும். பச்சைத் தழைவாசத்துடன் கிளறப்பட்ட மண்வாசனையும் நாசியைத் தாக்கும். கதவிலிருந்து முதல் பத்தடிதூரம்வரை தரையில் செங்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். இடதுபுறமாய் நீண்டுசெல்லும் பத்தடி அகலபாதை மண்ணால் ஆனது என்றாலும், சீரான பராமரிப்பில் இருந்தது.
கபரஸ்தான் பராமரிப்பை, குட்டை ஷாஜஹான் மாமு பார்த்துக்கொள்வார். அவர், எல்லா வயதுக்காரர்களுக்கும் மாமுதான். கபரஸ்தானில்தான் பகல் முழுவதும் இருப்பார். கபரஸ்தானுக்குள்போக, அவர் பள்ளிவாசலில் இருக்கும் குளிக்கும் தண்ணீர்த்தொட்டியின் மீதேறி, குட்டிச்சுவற்றில் உட்கார்ந்து, முதலில் ஒருகாலைத் தூக்கிப்போடுவார். அப்புறம் வேட்டியை இரண்டு கால்களுக்கிடையில் சுருட்டிப்பிடித்துக்கொண்டு அடுத்த காலையும் போட்டபடி குதிப்பார். 'தொம்'மென்று சத்தம் மட்டும் கேட்கும். ஆள் தெரியமாட்டார்.
சின்ன வயதில் , அவருடன் நானும் சேர்ந்து குதித்துப் போயிருக்கிறேன். எலந்தை, நவ்வா, கொடுக்காப் புளி சிதறிக்கிடக்கும். அவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டுவருவேன்.
கபரஸ்தானின் எல்லாப் பகுதிகளுக்கும் வாசலிலிருந்து போய் வர பிரத்யேகமான பாதையை அமைத்தது, அவர்தான். என் பெரிய அண்ணனின் வயது அவருக்கு. "க்யாரே குட்லியான்?" என்றுதான் எல்லோரையும் விளிப்பார். அவருக்கு. தன் உயரத்தின் மீது காம்ப்ளக்ஸ் இருந்ததாகச் சொல்வார்கள். அதுவே அவரை நிக்காஹ் செய்யவிடாமல் தடுத்து, கடைசிவரை 'அன்பாயாவாக' இருக்கச் செய்து விட்டது.
கபரஸ்தான் கதவைத்திறந்து அந்தவழியாக மெளத்தை உள்ளேகொண்டு போகும்போது,"சாவியைத் தொலச்சுறாதீங்க, மோதினாரே. அடுத்தடுத்து தெறக்கணும்" என்று அவர் கேலிசெய்வதுண்டு. அப்போதெல்லாம் எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. அர்த்தம் புரிந்து அதுபற்றி யோசித்தபோது, அறிவுப் பூர்வமான நெருடல் இருந்தாலும் சம்பவங்களின் நிகழ்வு என்னை மனநெருக்கடிக்கு ஆளாக்கியது. குட்டை ஷாஜஹான் மாமு மெளத்தாகிப் போயும் இருபத்தேழு வருடங்கள் ஆகிவிட்டன.
ஏழரைப்பங்காளி வாரிசுகள் மஹல்லாவிலிருந்து இடம்பெயர்ந்து எங்கெங்கோ போய்விட்டார்கள். நிக்காஹ், மெளத், தாதா பாத்திஹா என்று விஷேங்களின்போது மட்டும் கூடுவது வழக்கமாகியிருந்தது. பின்பு, அதுவும்கூட நெருக்குவட்ட உறவுகளுக்கு மட்டும் வந்துபோவது என்பதுபோல சுருங்கி விட்டது. என்றாலும் கபரஸ்தான் கதவு மட்டும், தன் நிலையிலிருந்து மாறியதாகத் தெரியவில்லை.
குட்டை ஷாஜஹான் மாமுவின் மெளத்துக்குப் பின்பான கபரஸ்தான், முற்றிலும் மாறிவிட்டது. அதைப் பராமரிக்க எவரும் முன்வரவில்லை. குப்பையும் காய்ந்த சருகுகளுமாய்... பாம்பு, பூரான், ஓணான் ஆகிய ஜந்துகளின் பூர்வ இடமாகிப் போனது!
*
பீபீஜான் மெளத்தின்போது, கபர்க்குழி வெட்ட ஆள் கிடைக்கவில்லை. அதற்கு முந்திய ரஹூமானின் மெளத்வரை, உறவில் மிகவும் ஏழையாக இருந்த பாபுபாய்தான் மண்வெட்டி பிடித்தார்.
அவர் செய்துவந்த ஏழட்டு வகையான அன்றாடங்காய்ச்சி வேலைகளுடன், குழிவெட்டுதலும் ஒரு வேலையாகியிருந்தது. அவர் ஊரைவிட்டுப்போனதும் எவரும் குழிவெட்ட முன்வரவில்லை.
பீபீஜான் பெரிய பணக்காரி. விரல் நீட்டினால் வேலைசெய்ய அவளுக்கு ஆட்கள் இருந்தனர். இருந்தும்... குழிவெட்ட ஆள்தேடி அலைய நேரிட்டது. மற்ற பள்ளிவாசல்களுடன் இணக்கமாக வேறு இல்லாதுபோனதால் அவர்கள் ஆள் அனுப்ப யோசித்தனர். வேறுவழியில்லாமல் மஹல்லா பசங்க நாலைந்து பேர் குழிவெட்டித் தர, பீபீஜான் மய்யம் மண்ணைக் கண்டது.
அடுத்த வாரத்தில் சங்கக் கூட்டம் கூடியது. இதில் குழிவெட்டுதல் பற்றிய பேச்சே பிரதானமாக இருந்தது. சாப்ஜான் பாய் எழுந்து பேசினார். ஏழரைப் பங்காளி வகையறாவிலேயே மெத்தப் படித்தவர் அவர்தான். அவர் எதைப்பற்றி பேசினாலும் தொலைநோக்கு இருக்கும். நுணுக்கமும் நுட்பமாகப் பேசுவார். ''எதுக்கு ஒவ்வொரு மெளத்துக்கும் குழிவெட்ட ஆள்தேடிப் போகணும். குழிவெட்டுறதக் கேவலமான தொழிலாப் பாக்குறாங்க. இப்ப ஆளு கிடைக்குறதும் கஷ்டமா இருக்குறதால, பேசாம பொக்லைன கொண்டுவந்து ஆறேழு கபர்க்குழிய வெட்டிட்டா என்ன?"
அவர் சொன்னக் கருத்தை காதுகொடுத்துக் கேட்ட கூட்டம் வாய்ப்பிளந்து போனது. ரெடிமேட் கபர்க்குழி பற்றிய பேச்சு புதிய விஷயமாகப்பட்டது. "நவீனயுகத்துக்கு ஏற்ற ஆலோசனை" எனவும் "கபர்க்குழிய அப்பப்ப தான் வெட்டணும். அதான் நல்லது" என்று எதிர்ப்புமாய் பல குரல்கள் எழும்பின.
"நல்ல திட்டத்தைச் சொன்னா எவங்கேக்குறான்?" என்று சலித்துக்கொண்டு கிளம்பிப்போய் விட் டார், சாப்ஜான் பாய்.
அந்தக் கூட்டத்தில், "வேறு சமூகத்து ஆளவெச்சு வெட்டுறதா இருந்தாலும், அப்பப்ப கபர்க்குழிய வெட்ட விடலாம்" என்று முடிவெடுக்கப்பட்டது.
பீபீஜானைத் தொடர்ந்து இருவேறு மெளத்துகள் சொல்லிவைத்தாற்போல் விழுந்ததும், அதன்பின் நடந்த மாதாந்திரக் கூட்டத்தில் ஷாகுல் பேசினான். "இந்தக்கதவை ஒருதடவை தெறந்தா, மூணு மெளத்து விழுதுனு பேசுறது சங்கடமா இருக்கு. கபரஸ்தானுக்கு எதுக்கு கதவு?"
அவன் கேள்வி நியாயமாகப்பட்டது. தலைவர் காதுகுரும்பியும், செயலாளர் ரயில் பாட்சாவும், பொருளாளர் மதனியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். "பொடிப்பசங்களா இருந்தாலும் புத்திசாலித்தனமாப் பேசுறாங்க!" என்று வாய்விட்டுப் பேசினார்கள்.
கதவை எடுத்துவிடலாம் என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் முகத்தில் ஒருவித நிம்மதி தெரிந்தது. இளைஞர்களில் நாலைந்துபேர் சேர்ந்து, கீல்களிலிருந்து கதவை நெம்பித்தூக்கி, சுவரோரம் சாய்த்து வைத்துவிட்டார்கள்.
இப்போது கபரஸ்தான் 'ஹா'வென்று வாய்ப்பிளந்து தெரிந்தது.
கதவு, ஓரங்கட்டப்பட்டுவிட்ட பின்பு, வேறுவேறு பிரச்சனைகள் எழ ஆரம்பித்தன. "கபரஸ்தான்ல என்னன்னவெல்லாமோ நடக்குதாமே? ராத்திரில பொம்பளைப் புழக்கம் இருக்குறதா பேசறாங்களே?" மஹல்லா பெண்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். சுவற்றில் சாத்திவைக்கப்பட்ட கதவு, மறுபடியும் அதன் இடத்தில் பொருத்தப்பட்டது.
*
ராகிலாவின் மெளத்தில் கபரஸ்தான் ஒருபுதிய அனுபவத்தைச் சந்தித்தது. ராகிலா, தாவூத் சாயபுவின் ஒரே மகள். படிக்கும்போது காதலித்த பையனை ரிஜிஸ்டர் பண்ணிக்கொண்டிருந்தாள் , அவள்.
ராகிலாவின் செயல், மஹல்லாவில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கிவிட்டிருந்தது. மஹல்லா பெண் வேறு மதத்துக்காரனை கட்டிக்கொண்டது இதுவே முதல்முறை என்பதால், இந்தப்பேச்சு பல உருவங்களைப் பெற்றது.
தாவூத் சாயபு, மகளை ஆள்வைத்துத் தேடிப்பிடித்து விட்டார். என்றாலும் அவள் வர மறுத்துவிட்டாள்.
மகளின் செய்கை வருத்தமாக இருந்தாலும் அவள் பிரிவு, தாவூத் சாயபுக்கு சங்கடத்தைக் கொடுத் திருந்தது. இமைப்பொத்தி வளர்த்த மகள்.
ஏழெட்டுவருட இடைவெளியில், ராகிலாவை மறந்திருந்த எல்லோருக்கும் அவளது அகால மரணம், மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வந்தது. ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு போனவளை எதிரே வந்த லாரி இடித்துத்தள்ளிவிட்டது.
சேதி தெரிந்தவுடன் விழுந்தடித்து ஓடிய தாவூத் சாயபு, "இப்பவாச்சும் எம்பொண்ண எங்கிட்ட ஒப்படைச்சுருப்பா. எங்க முறைப்படி அவளை அடக்கம் செய்யணும்!" என்று கெஞ்சிக் கதறியிருக்கிறார்.
ராகிலாவின் காதல் கணவன் ஒத்துக்கொண்டதும், கபரஸ்தானில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வைத்தார். கபர்க்குழிவெட்ட ஆள் போனது. சிச்சாலால் சந்தனக் கடைக்கு கபன் பொருட்கள் வாங்க ஒருவன் ஓடினான்.
எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில், மய்யத்தின் வருகைக்காக உறவினர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
நேரம் போய்க் கொண்டிருந்தது. தாவூத் சாயபு வெறும் ஆளாய்த்திரும்பி வந்தார்.
"என்ன பாய் ஆச்சு?"
அவருடன் போய்வந்தவர்கள் சொன்னார்கள்: "மருமகப் பைய ஒப்புக்கிட்டாலும் அவங்கூட்டம் மய்யத்தை தர முடியாதுன்னுருச்சு. அவ, ஏழு வருஷம் அவங்க மருமகளா இருந்துட்டாளாம். அவ அவங்க வீட்டு மருமகளாம். அவங்க மதப்படிதான் காரியம் செய்வாங்களாம்!"
இயலாமை, தாவூத் சாயபு முகத்தில் பிரதிபலித்தது. மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பித்தார்.
'வெட்டுன கபர்க்குழிய என்ன செய்றது?' எனும் கேள்வி இப்போது எல்லோரையும் கவலைக்கொள்ள வைத்தது.
அப்போதே மணி, இரவு பத்தாகியிருந்தது. '' வெட்டுனக்குழிய சும்மாவும் போட முடியாது. வெறும் குழிய மூடவும் கூடாது! என்ன பண்றது?" பேச்சு வளர்ந்துகொண்டே போனது. பல்வேறு அனுபவங்களும ஆலோசனைகளும் வந்து விழுந்தன.
இப்போது ஒருகீச்சுக்குரல் இடையே புகுந்தது. "ரொம்பப் பேசுறான் பாரு. அவனைப்போட்டு அடக்கம் பண்ணுங்க!"
இறுக்கமும் சிடுக்கும் நிறைந்த அந்தத்தருணம், சிரிப்புக்கு இடம் மாறியது.
இந்தநேரத்தில் நாஜர் அப்பாஸ் சொன்ன செய்தியும் விதமும் ஒரு தீர்ப்பைப் போலிருந்தது. " குழியை சும்மாவும் போட முடியாது. வெறுமனேயும் மூடக்கூடாது. அப்டித்தானே? உப்பு ரஹ்மத்தானது. வேறு வழியில்லை. அத நிரப்பி மூடுங்க!"
அப்போதைக்கு வேறு எதுவும் யாருக்கும் தோன்றவில்லை. அதனால் சாமி ஐயா கடையைத் திறக்கச் சொல்லி ஒருமூடை உப்பு எடுத்துவந்து கொட்டப்பட்டது. மற்ற காரியங்கள் எல்லாமே ஒருமெளத்துக்கானதாக நடந்தன.
இதுபற்றிய சங்கதி பேப்பரிலும் வர... ஆச்சர்யம் கலந்த பிரமிப்பு, கபரஸ்தான் மீது மற்றவர்களால் வீசப்பட்டது.
எனக்குள் ஒருசந்தேகம் அரும்பியது. 'வெட்டுன குழில உப்புப்போட்டு மூடியிருக்கே. இந்தக்கணக்கு மூணுல வருமா?'
உப்பு கபருக்கு அப்புறம் ஒருமய்யத் விழுந்து, நாற்பதாம் செஹலம் பாத்திஹா வரைக்கும் அடுத்த மய்யத் எதுவும் விழவில்லை என்றதும் சங்கக் கூட்டத்தில் அதுபற்றி சந்தோஷமாகப் பேசப்பட்டது.
அந்த சந்தோஷத்தை அன்று சாயங்காலமே கெடுத்தது, மெளத் ஆகிப்பிறந்த ஒருகுழந்தை!
*

இரண்டாவது அட்டாக்குக்கு பின்பு, என்னை உறவுக்காரர்கள் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். சர்க்கரை, சாப்பாடு எல்லாவற்றிலும் கட்டுப்பாடு. வீட்டைவிட்டு வெளியில் எங்கும் போவது இல்லை. எல்லாமே பத்துக்கு பனிரெண்டான நூற்று இருபது சதுர அடிகளுக்குள்தான் என்றாகிவிட்டது.
அவ்வப்போது என் நினைவு தப்பிப்போவதாக வீட்டிலுள்ளவர்கள் குறைபட்டுக் கொள்வதும், சில வேளைகளில் படுக்கையிலேயே கழிவுகள் வெளியேறிவிடுவதும் எனக்குப் புரிகிறது.
போன வாரம் ஷபி என்னைப் பார்க்க வந்திருந்தான். என் பால்ய சிநேகிதன். டெல்லியிலிருந்தவன், சொந்த மண்ணில் மெளத்தாக வேண்டும் என்று வந்துவிட்டனாம். ஆள் தளர்வாய் இருந்தாலும் எல்லாமே அவனுக்கு சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் சொன்னான்.
நான்கு நாட்களுக்கு முன், மும்தாஜின் மெளத்துக்குப் போயிருந்ததாகவும் ஓடிப்போன அவள் புருஷன் வந்துசேர்ந்தச் செய்தியை, சுவாரசியமாகப் பேசிவிட்டுக் கிளம்பினான்.
கிளம்பும்போது மும்தாஜூக்கு முன்பு சிராஜூதீன் மெளத்தையும் சேர்த்தால்... இன்னும் ஒருமெளத் பாக்கியிருப்பதாகச் சொல்லி புளி கரைத்தான். எனக்குள், 'அடுத்து யாராக இருக்கும்?' எனும் கேள்வி எழவில்லை. அது, நானாகவே இருக்குமோ எனும் பயம்தான் வந்தது.
*

இன்று மதியம் நல்ல வெயில். உள்வீட்டிலும் வெக்கை இருந்தது. மூன்று மணிவாக்கில் நெஞ்சில் 'சுருக்'கென்றது. யாரையாவது கூப்பிடலாமா என்று வாயெடுத்தேன். வார்த்தை வரவில்லை. வெறுமை. திரண்ட காற்று தொண்டையை அடைத்து, என்னை பலமிழக்கச் செய்தது. திணறலாய் இருந்தது.
பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த பேரப்பிள்ளை, என் அறையில் யதேச்சையாய் எட்டிப்பார்த்து, "மா... ம்மா. தாதாக்கு என்னமோ பண்ணுது!" என்று, தன் யூகத்தை கத்தலாய்ச் சொன்னான்.
கபூர்ஷா டாக்டர் வந்து பரிசோதித்தார். "ஆஸ்பத்திரிக்கெல்லாம் வேண்டாம். பயப்படற மாதிரி ஒண்ணுமில்லை!" என்றார்.
அவர் சொன்னதும், சுற்றிநின்றிருந்த உறவுக்கூட்டம் கசகசத்து மெல்ல விலகுகிறது.
"கடைசியா மும்தாஜ்... அதுக்கு முன்னே சிராஜூதீன்... இன்னும் ஒண்ணு பாக்கியிருக்குல்ல?"- ஒரு குசும்புக்குரல் கேட்கிறது.
*
நன்றி : திண்ணை

1 comment:

  1. கபரஸ்தான் கதவு’ சிறுகதையை நீங்கள் வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் வாசித்த போதே கேட்டேன். மிகவும் நல்ல சிறுகதை. அதை வலைத்தளத்தில் வாசித்த போதும் உணர்ந்தேன். மரணம் குறித்து எல்லா சமுதாயத்திலும் நிறைய நம்பிக்கைகள் இருக்கின்றன. கிராமங்களில் ‘சனிப்பிணம் தனிப்போகாது’ என்ற நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். யாராவது சனிக்கிழமை செத்தால் வேறு யாரும் அடுத்து இறந்துவிடக்கூடாதென்று எண்ணி சேவலைக்கொன்று பாடையில் உடன் கட்டி விடுவார்கள். பகிர்விற்கு நன்றி. - சித்திரவீதிக்காரன்.

    ReplyDelete